இளைஞர்களுக்கு வழிகாட்டிய இரு இணையற்ற தலைவர்கள்
முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275

தும்பிக்கையால் சுவாசிக்கிற யானையைப் போல்
நம்பிக்கையைச் சுவாசித்து நேர்மையாய், வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு
இல்லாமல் வாழ்ந்தவர்கள் இருவரும். இருவரும் காலத்திற்காகக் காத்திருந்தவர்கள்
இல்லை,காலத்தையே கலமாகக் கொண்டு சாதனை வானில் பறந்து வரலாறு படைத்தவர்கள்.தண்ணீரில் மிதக்கும்
வெண்ணைக்கட்டி மாதிரி கண்ணீரில் மிதந்த ஏழைகளுக்காக இருவரும் இரங்கியவர்கள்.
பெரிய பெரிய பதவிகள் தங்களைத் தேடிவந்தபோதும்
பதவிக்குப் பின்னே ஓடாமல் அதை மக்களுக்கு உதவிக்கான நல்வாய்ப்பாக
மாற்றிக்கொண்டவர்கள் இருவரும். இருவரையும் ஒப்பிட்டுக் கட்டுரைக்குள் அடக்குவது
அருவித் தண்ணீரை அண்டாவுக்குள் அடைப்பதைப் போன்றது.
கற்பூரசோதி
காரிருள் நீக்கிய கற்பூரசோதியாய் சமுதாயத்தின்
பேரிருள் நீக்கிய பெருந்தலைவர்கள் இருவரும். தேங்கிப்போவதோ சோர்ந்தயர்ந்து
தூங்கிப்போவதோ இல்லை வாழ்க்கை,தேசத்தின் மீது நேசம் கொண்டு பாசத்தோடு மக்களுக்கு
உதவுவதே வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டிய
வள்ளல்கள் இருவர்.
இணையற்ற வாழ்ந்துகாட்டிகள்
உலகப் போர்களால் உருக்குலைந்துபோன உலகிற்கு
அஹிம்சை என்கிற அமுதத்தை அள்ளித்தந்த
வள்ளல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திஜியும், காந்திய நெறியில்
வாழ்ந்து,காந்தியாகவே வாழ்ந்து காந்தி ஜெயந்தி அன்றே கண்ணயர்ந்த கர்மவீரர் காமராஜரும்
இன்றைய இளையோரின் இணையற்ற வாழ்ந்துகாட்டிகள். மனித ஆத்மாக்களுக்கு மத்தியிலே
மகாத்மாவாக மாற அவர் என்ன செய்தார்? கர்மமே கண் என்று லட்சக்கணக்கான குழந்தைகளின்
கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் இன்றும் தூயஆட்சியாளராய் நினைத்துப்
பார்க்கப்படுகிறாரென்றால் காரணம் என்ன?
கைதவறி கீழே விழுந்த பாதரசம் எப்படி எந்த
அழுக்கோடும் ஒட்டாமல் உருண்டோடுமோ அதுபோல் இந்த இரு தலைவர்களும் உலகியல்
வாழ்க்கையோடு ஒட்டிஒட்டாமல் வாழ்ந்தவர்கள்.மனத்துக்கண் மாசுஇல்லாமல் வாழ்தலையே
அனைத்து அறமாகக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள். இருவரும் அனுபவங்களால்,வாழ்வை
ஆராதனை செய்தவர்கள். இந்திய நாட்டின் விடுத்தலைக்காகப் பல நாட்கள் சிறையிலேயே
கழித்தவர்கள் இருவரும்.தன்னலமில்லாத் தியாகதீபங்கள் இருவரும்.
எளிமையான தலைவர்கள்
விளம்பரத்திற்கு ஆசைப்படாத எளிமையான தலைவர்களாக
இருவரும் திகழ்ந்தார்கள்.1901 ஆம் ஆண்டு ஒரு மாநாட்டிற்காக மகாத்மா
காந்திஜி,கல்கத்தா வந்தருந்தார். மாலையில் மாநாடு தொடங்கயிருந்த இடத்தைக் காலையில்
பார்வையிடச் சென்றார்.அந்த மைதானம் குப்பையும் கூளமுமாயிருந்தது. ஒன்றும் பேசாமல்
காந்திஜி துடைப்பத்தைக் கையில் ஏந்தி மைதானத்தைத் தூய்மைசெய்யத்தொடங்கினார். ஓடோடி
வந்த தொண்டர்கள் “ பாபுஜி..நீங்கள் எங்கள் தலைவர்,இப்படிச் செய்யலாமா?” என்று
கேட்டனர். நம் வீடு குப்பையாகக் கிடந்தால் நாம் செய்யமாட்டோமா? என்று மறுகேள்வி
கேட்டார்.
தஞ்சை மாவட்டச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட
காமராஜர் ஒரு பழைய கோவிலுக்குள் சென்றார், உடன் இருந்தவர்களிடம் “ இதை யார்
கட்டுனான்னு கேட்டேன்” என்றார். யாருக்கும் தெரியவில்லை,சட்டென்று மேலே
எரிந்துகொண்டிருந்த குழல்விளக்கைக் காட்டி, ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி
இந்தக்கோயிலே கட்டுன மவராசன் யாருன்னு தெரியல..அதுல டியுப் லைட்போட்ட மவராசன் பேரு
பெயிண்டுல எழுதியிருக்குன்னேன்” என்று சிரித்தபடிச் சொல்லியவாறே காமராஜர் வெளியே
வந்துவிட்டார்.
பதவியை விரும்பாப் பண்பாளர்கள்
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஜவஹர்லால்
நேருவும், சர்தார் வல்லபாய் படேலும் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் கூட எந்த ஆட்சிப்
பொறுப்பையும் ஏற்க மறுத்தார் அண்ணல் காந்தியடிகள். இரண்டு முறை பிரதமர் ஆகும் வாய்ப்பு
வந்தபோதும் ஏற்காமல் திரு.லால்பகதூர் சாஸ்திரியையும் திருமதி. இந்திராகாந்தியையும்
பிரதமராக்கி அழகுபார்த்த ஒப்பற்ற தலைவர் கர்மவீரர் காமராஜர். “பதவியைத் தேடி நாம்
போனால் பதவிக்குப் பெருமை, பதவி நம்மைத் தேடிவந்தால் நமக்குப்பெருமை” என்று
அடிக்கடிக் கூறியவர் கர்மவீரர் காமராஜர்.
கொள்கை வீரர்கள்
பாரிஸ்டர் பட்டம் பெற்ற மோகன்தாஸ் கரம்சந்த்
காந்தி கறுப்பர் என்ற காரணத்தால் டர்பன் நீதிமன்றத்தில் தலைப்பாகையோடு வாதாட அனுமதி
மறுக்கப்பட்டது.அதைக் கடுமையாக எதிர்த்த காந்திஜி உடனே அந்த நீதிமன்றத்தை
விட்டுவெளியேறினார்.முதல் வகுப்புப் பயணச் சீட்டோடு பிரிட்டோரியாவுக்குப் பயணித்தவரை நிறவெறியோடு
வெள்ளையர்கள் தூக்கி எறிந்தபோது பட்ட ரணத்தை இந்தியநாட்டின் சுதந்திரத்திற்காகப்
பயன்படுத்தினார். ராட்டையையே சாட்டையாக்கி அந்நியரை நாட்டைவிட்டு ஓட்டச்செய்த
மகாத்மா காந்திஜி மதுரையில் தன் ஆடைகளை மாற்றித் தமிழ்நாட்டு விவசாயிகள் உடுத்தும்
மிக எளிய உடைக்கு மாறினார். மகாத்மாவின் கொள்கைகளில் கவரப்பட்டு கர்மவீரர்
காமராஜர் வாழ்நாள் முழுக்க கதராடையையே உடுத்தினார்.
மனிதநேயச் செல்வர்கள்
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற
வள்ளலாரின் மனிதநேயநெறியை இருவரும் தம் வாழ்வின் அறமாகக் கொண்டவர்கள். பள்ளிக்குச்
செல்லும் வயதில் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், கர்மவீரர் காமராஜரைப்
பெரிதும் பாதித்தன் விளைவாக மகாகவி பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில், கர்மவீரர்
காமராஜர் உலகம் போற்றும் மதியஉணவுத்
திட்டத்தைத் தொடங்கிவைத்தார். “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும்
மனிதர்க்கெல்லாம்” என்று மகாகவி பாரதியார் சொன்னதைச் செய்துகாட்டியவர் கர்மவீரர்
காமராஜர்.
சம்பரானில் கஸ்தூரிபாவோடு பயணித்துக்கொண்டிருத்தபோது
அழுக்கு உடையோடு குழந்தைகள் பிச்சைஎடுத்துக் கொண்டிருப்பதை காந்திஜி பார்க்கிறார்.
“ கஸ்தூரிபா..இவர்கள் அழுக்கோடு மாற்று உடை இல்லாமல் இருப்பது உனக்கு
உறுத்தவில்லையா? நீ ஏன் இவர்களை நீராடவைத்து தூய்மையான உடையணிவித்து பாடம்
சொல்லிக் கொடுக்கக் கூடாது?” என்று கேட்டார். காந்திஜி சொன்னபடி வாழ்க்கை முழுக்க
கஸ்தூரிபா செய்தார்.காந்திஜி எந்த கிராமத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும்
கஸ்தூரிபா, அழுக்கோடு திரிந்துகொண்டிருக்கும் குழந்தைகளை நீராடச்செய்து நல்ல
உடைகள் அணிவித்து பாடம் கற்றுத்தருவதை பழக்கமாகக் கொண்டார்.
நேரம்தவறாமை
மகாத்மாவிடமும் கர்மவீரர் காமராஜரிடமும்
கற்றுக்கொள்ள வேண்டிய உயர்பண்பு நேரம்தவறாமை. காந்திஜி எப்போதும் இடுப்பில்
கடிகாரத்தைத் தொங்கவிட்டிருப்பார். ஒருவினாடி கூடப் பிந்தாமல் குறித்த நேரத்தில்
எதையும் செய்வார். கர்மவீரரும் அப்படியே வாழ்ந்தார். குறித்த நேரத்தில்
கூட்டத்தைத் தொடங்காத அமைப்பாளர்களை “ஒருவருக்காகப் பத்துப்பேர் பத்துநிமிடம்
காத்திருந்து ஒரேநேரத்தில் நூறுநிமிடத்தை நாம் இழந்துகொண்டிருக்கிறோம்” என்று கடிந்துகொண்டு கர்மவீரர்
திருத்தமுயன்றிருக்கிறார்.
சத்தியசோதனை மேற்கொண்ட தலைவர்கள்
மகாத்மாவுக்கு முகஸ்துதி பிடிக்காது. “நாம் சேவை
செய்யத்தானே பிறந்திருக்கிறோம் இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?” என்று அடிக்கடி சபர்மதி ஆஸ்ரமதிற்கு வருவோரிடம்
கூறுவார். காமராஜரும் அப்படியே வாழ்ந்தார். யாரேனும் தன்னைப் பாராட்டிப் பேசினால்,
“
நிறுத்துனேன்..என்னைப் புகழ்ந்து பேசும் நேரத்திலே நல்ல காரியம் எதையாவது
செய்யலாமேனேன்” என்பார். முதலமைச்சரானதும்
அவர் பாதுகாப்புக்கு தன்காருக்கு முன் சைரன் வைத்த கார் சென்றதை விரும்பாதவர். பல்கலைக்கழகம்
அவருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் தரவிரும்பியபோது “ நான் அப்படி என்ன
பண்ணிட்டேன்னு டாக்டர் பட்டம் தரவாரிக..அதெல்லாம் வேணாம்னேன்” என்று மறுத்தவர்
காமராஜர்.
இணையற்ற இரு தலைவர்கள்
மகாத்மாவும் கர்மவீரரும் தூய்மையின் அடையாளமாய்
திகழ்ந்த ஈடு இணையற்ற, அப்பழுக்கற்ற தலைவர்கள். சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு
இல்லாமல் வாழ்ந்த மனிதநேயத் தலைவர்கள். சிறுவயதில் தந்தையை இழந்துதாயாரின் அன்பில்
வளர்ந்தவர்கள்.இருவரும் சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறைசென்றவர்கள்.அந்நிய ஆடைகளை
மறுத்து காலம்முழுக்க கதராடை அணிந்தவர்கள். எளிமையானவர்கள், பழகுவதற்கு
இனிமையானவர்கள், நேர்மையானவர்கள். தாழ்வுற்று, வறுமைமிஞ்சி, விடுதலை
தவறிக்கெட்டு,தன் அன்னை தேசம் பாழ்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தங்களையே
சுதந்திரவேள்வியில் உருக்கிஊற்றியவர்கள். அவர்கள் வழியை நம் விழிகள் நோக்கட்டும்.இந்த
தேசத்தை நேசித்த அவர்கள் வழியில் நம் இளையோர் பயணம் நடக்கட்டும்.
Comments
Post a Comment