தொலைதல்





பெருநகரங்கள்
எங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றன
தலைக் கவசம் அணிந்து தலைதெறிக்க
வண்டியில் பறக்கும் எங்களுக்கு
முகங்கள் முக்கியமில்லை.

மின்சாரத் தொடர் வண்டிகளில் விபத்தில் சிக்கி
முகம் சிதைந்து கிடக்கிற
சவத்தின் முன்கூடச் சாவகாசமாய்
சாக்லேட் சாப்பிட முடிகிறது

ரசித்தலுக்கு நேரமற்றுப் போனதால்
சன்னல்கள் எங்களுக்கு அவசியமில்லை
நிலைய நிறுத்தங்களுக்காக
வாயில்களுக்கருகேதான் காத்துக் கிடக்கிறோம்.

சக மனிதர்களின் அபய ஓலங்கள்
எங்கள் செவியுள் நுழையாதிருக்க
கருவியை மாட்டிக் காதுகளில்
இசையை இறுத்திக் கொள்கிறோம்.

பக்கத்து இருக்கை நண்பர்களைவிட
முகப்புத்தக அன்பர்களே எங்களுக்கு முக்கியம்
அவர்கள்தான் கைமாத்து கேட்க வரப்போவதில்லை

அன்னையர் தினத்திற்கு மறவாமல்
மின்னஞ்சலில் வாழ்த்தனுப்புகிறோம்

தவித்த வாய்க்குப் பெப்சியும்
பசியெடுத்தால் பீசாவும், போட்டுக்கொள்ள
அரை டஜன் அரை டிரவுசர்களும் தயார்
போதாதா பெருநகரத்தில் வாழ?

சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை