வாழத் தயார்




முகங்கள் இல்லையாதலால்
முகவரிகளும் இல்லை அவனுக்கு.
சிதை முகங்கள் குறித்து அவன்
சிரமப் பட்டதுபோல் தெரியவில்லை.
முகப்பூச்சு மாவுகள், சிகப்பழகுப் பசைகள்
மிச்சமென மெதுவாகச் சிரிக்கிறான்

எல்லோரிடமும் பற்களைக் காட்டிக் காட்டிப்
பேசிப் பேசிக் காலப் பச்சையத்தையே
அவன் கரைகளாக மாற்றிக் கொண்டான்.

எப்போதும் யாரையும்
குதிரையேற்றிக் குதிரையேற்றிக்
கூனிப் போயின அவன் முதுகுகள்
அவன் தண்டுவடத்தில்
தள்ளாட்டத்தின் தழும்புகள்...
யாரையும் தூக்காமல் இப்போது தனியே
அவனால் நடக்கக்கூட முடியவில்லை.

கூழைக் கும்பிடு போட்டுப் போட்டு
ஒட்டிப் போயின அவன் கரங்களிரண்டும்
பிரிக்க இயலாப் பேரிணைகளாயின.

மூளையை முன்னரே எடுத்தாகி விட்டதால்
அது பற்றிச் சிந்திக்கத் தேவையற்றதாகிவிட்டது

இப்போது
அவன் - இந்த
உலகில் வாழத் தயாராகி விட்டான்.

Comments

Popular posts from this blog

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி