தப்பாய் போன அப்பாப் பழமொழி



குழந்தை பிறந்தவுடன்
அந்நாளின் காலண்டர்தாளைக் கிழித்து
நாற்பது பக்க நோட்டில் ஒட்டி
இன்னார் குழந்தை இந்த நாளில்
சுப ஜனனம் என்று மறக்காமல்
எழுதி ஆவணப்படுத்துவார் அப்பா.

கேஸ் சிலிண்டர் வந்தவுடன்
சோற்றுப் பருக்கையை நசுக்கிக்
காலண்டர் தாளால் காலப்பதிவு செய்வதும் அவர்தான்.

கழிவு நீர்த் தொட்டியைச்
சுத்தம் செய்த நாளைக் கூடத்
தாரால் தகரக் கதவில் அவர் எழுதியிருந்தார்.

வங்கி நாமினிக்காக
என் மனைவியின் பிறந்தநாளை
ஐ.ஓ.பி. மேலாளர் கேட்டார்;
அதையே நானும் அவளிடம்
தொலைபேசியில் கேட்டேன்
அதோடு கெட்டேன்.

அப்பாவுக்குப் பிள்ளை
தப்பாமல் பிறந்தானென்ற
பழமொழியும் இப்போது
தப்பாய் போனதெப்படி
சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை