தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை




            
பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த் துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி
mahabarathi1974@gmail.com, cell 9952140275

நம் தாயிடமிருந்து கற்கும்மொழி, நமக்குத் தாயாய் அமைந்து உலகியலைக் கற்பிக்கும் மொழி நம் தாய்மொழியாம் தமிழ்மொழிதான். நம் விழியாய் அமைந்து எல்லாவற்றையும் பார்க்கத் துணைபுரிகிறது. 

தாய்மொழி எனும் பெருவரத்தின் ஆற்றல் புரியாமல் இன்னும் அயல்மொழிகளைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு திரிகிறோம். தமிழ், எழுத்துகளோடு மட்டும் தொடர்புடைய மொழியன்று. பண்பாட்டோடு தொடர்புடைய மொழி. உலகம்முழுக்க எட்டுகோடி தமிழர்களின் தாய்மொழியாய் உள்ள தமிழ்மொழி திராவிடமொழிகளின் தாயாகத் திகழ்கிறது.  

  உலகின் முதல் மனிதன் தோன்றியதாகக் கருதப்படும் லெமூரியாக் கண்டத்தில் பிறந்து நீண்டதொல்மரபின் தொடர்ச்சியாகப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட மொழி நம்மருமைத் தாய்மொழி. ஆதிநாகரீகத்தின் சாட்சியாய் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்ச நல்லூரில் முதுமக்கள்தாழிகள் கிடைத்துப் பல திருப்பங்களை உண்டாக்கியது.

உலகத்தமிழ்

சிங்கப்பூரிலும் மலேசிய நாட்டிலும் கனடாவிலும் இலங்கையிலும் துபாயிலும் மொரிசியஸ் நாட்டிலும் இந்தோனேசியாவிலும் பிஜிதீவிலும் தென்னாப்ரிக்க நாட்டிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் இங்கிலாந்து நாட்டிலும் தொப்புள்கொடி உறவாம் அன்னைத் தமிழ் உறவை இனிய தமிழ்ப்பள்ளிகளைக் கொண்டு அவர்கள் மென்மேலும் உறுதிப்படுத்திக்கொண்டிருக்க, நாமோ நம் தாய்மொழியை மறந்துவிட்டு அயல்மொழி மயக்கத்தில் அமர்ந்துகொண்டிருக்கிறோம்.

சிங்கப்பூரின் தேசியமொழிகளுள் ஒன்றாகத் தமிழ் அரியணையில் அமர்ந்துள்ளது. அந் நாடெங்கும் அழகுதமிழில் அறிவிப்புகளைக் காணமுடிகிறது. மலேசியாவில் தமிழுக்கு அரசியலமைப்பில் உரிமை தரப்பட்டுள்ளது. சென்றஆண்டு ஒன்பதாம் உலகத்தமிழ் மாநாட்டினை மலேசியப் பிரதமரே முன்னின்று நடத்தித் திருக்குறளின் சிறப்பை மிக அழகாக ஆங்கிலத்தில் எடுத்துரைத்தார். 

அங்குள்ள 525  தமிழ்ப் பள்ளிகளுக்குத் தமிழ்இலக்கிய அறிமுக நூல்களை அரசே தமிழ்நாட்டிலிருந்து வாங்கி மாணவர்கள் படிக்கத் தந்தது. நான்கு தேசியமொழிகளில் ஒன்றாகத் தமிழ் திகழ்கிறது. தென்னாப்பிரிக்காவில் தமிழுக்கு அரசின் உதவி உள்ளது. இலங்கையில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்லூரிகளும் சிறப்பாகச் செயல்படுகின்றன. இங்கிலாந்து நாட்டில் தமிழகத்திலிருந்து சென்ற இளைஞர்கள் தமிழ்ப்பள்ளிகளை நடத்தி தமிழ்விழாக்களையும் நடத்திவருகின்றனர். வளைகுடா நாடுகளில் தமிழர்கள் தமிழ்ப் பயிற்றுவிக்கும் நிலையங்களைப் பலஆண்டுகளாக நடத்திவருகின்றனர். 

அன்னைத் தமிழின் அருமையை உலகெங்கும் தமிழ் மக்கள் உணர்ந்து தமிழ் பயின்றுகொண்டிருக்க தமிழ் நாடாகத் திகழும் நம் மாநிலத்தில் தாய்மொழியைக் கற்காமலேயே எல்.கே.ஜி. முதல் எம்.பி.பி.எஸ் வரை பயின்று விடலாம்என்ற நிலையை நாம் எப்படி மாற்றுவது? நாம் சல்லடையால் சமுத்திரத்தைச் சலிக்கிறமாதிரி தமிழ்க்கல்வியைவிட்டு அப்பால் போய்க்கொண்டிருக்கிறோம். தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி என்று எந்தக் கல்வியாக இருந்தாலும் தமிழ் பயில்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே! எப்படி இதை செய்துமுடிக்கப் போகிறோம்? விழிப்பாயிருக்கிறவனுக்கு எதுவும் வியப்பாயிருக்காது. தாய்மொழி குறித்த விழிப்புணர்வு இன்னும் நமக்கு வரவேண்டும்.

தாகூரின் தாய்மொழிப் படைப்பு

தாய்மொழியின் துணையோடுதான் நம்மால் சிந்திக்க முடியும். மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரது தாய்மொழியான வங்கமொழியில் எழுதிய  கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு 1913 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. அவர் நினைத்ததை எல்லாம் சொல்லும் திறன்மிகுந்த ஊடகமாக அவர் வங்கமொழியைக் கருதினார்.

 “ இறைவா! இந்தச் சிறிய புல்லாங்குழலை நீ மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமவெளிகளிலும் சுமந்து எல்லையில்லா நாதத்தை வெளியிடுகிறாய்!” என்று கீதாஞ்சலியின் முதல்பாடலில் தன்னை ஒரு புல்லாங்குழலாகவும் தன்னைப் படைத்த இறைவனை அற்புதமான கலைஞானியாகவும் உருவகித்துப் பாடிப்பரவினார்.

 தாய்மொழியில் அவர் எழுதியதால் அது உலகின் ஒப்பற்ற நோபல் பரிசினை வென்றது. கனமான அரிசி மூட்டையை லாவகமாகக் கொக்கியால் குத்தித்தூக்கி முதுகில் ஏற்றி இடம் மாற்றும் தொழிலாளியின் நேர்த்தியான லாவகம்  கவிதைகளுக்கு உண்டு. அக் கவிதையின் கனம் வாசிக்கும் வாசகனின் மனதில் இடம்மாறி மனதை ஒரு வினாடியில் பாராமாக்கும். இறந்துபோன வண்ணத்துப்பூச்சியை இரக்கமில்லாமல் இழுத்துச் செல்கிற எறும்பைப்போல் காலம் நம்மை இழுத்துச்செல்லும் கோலத்தை நம் தாய்மொழியைத் தவிர வேறு எதன்துணைகொண்டு சொல்லமுடியும்?

மகாகவி பாரதியின் தாய்மொழிப் பற்று

மகாகவி பாரதிக்குத் தாய்மொழியின் மீது அளவற்ற அன்பு.செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாய்ந்தது அவன் காதினிலே. பதினோறு மொழிகள் கற்ற அந்த மாகவிக்குத் தாய்மொழியாம் தமிழ்மொழியே இனித்தது. “ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று சொல்லவைத்தது. தமிழின் மீதும் தமிழ்இலக்கியங்கள் மீதும் தீராப்பற்று கொண்ட பாரதியால் ஆங்கிலக்கல்வியை ஏற்க முடியவில்லை. எட்டயபுரத்தில் இருந்த கல்விபயில நெல்லை வந்ததால் செலவு அதிகம் ஆனது.தந்தையின் வறுமை அவரை அரித்தது. மனம் நிம்மதி இழந்து தவித்தது

செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;
     தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;
நலம்ஓர் எள்துணையும்கண்டிலேன் அதை
     நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டதன் அடையாளமாய் நாம் நம்  தாய்மொழியை மறந்துவிட்டு ஆங்கிலமொழியைத் தூக்கித்திரிவதைக் காணமுடிகிறது.

காந்திஜியின் தாய்மொழிப் பற்று

உலகெங்கும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட மகாத்மாகாந்தியின் தன்வரலாற்று நூலான சத்திய சோதனையை அவர் தன் தாய்மொழியான குஜராத்தி மொழியில்தான் முதலில் எழுதினார். தங்குதடையில்லாமல்  சிந்திப்பதற்கும் புதிய கருத்துகளை முன்மொழிவதற்கும் தாய்மொழியால் மட்டுமே முடியும் என்று காந்தி நம்பினார். 

1917 ஆம் ஆண்டு, புரோச் நகரில் நடைபெற்ற கல்விமாநாட்டில் தாய்மொழி வழிக்கல்வியால் மட்டுமே நல்ல சிந்தனையாளர்களை உருவாக்க முடியும் என்று பேசினார். தாய்மொழியில் ஆற்றல் இல்லாதவன் புலமை அடித்தளமில்லாமல் கட்டும் கட்டடம் போன்றது என்று காந்திஜி கூறினார்.பாடம் புரிந்தால்தானே அது குறித்து மாணவன் வினா எழுப்புவான்! என்று காந்தி வினவினார்.

தொன்மையான மொழி

தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்கும்என்ற டார்வீனின் விலங்கியல் கோட்பாட்டின்படி, மனிதன் தப்பிப் பிழைப்பதன் காரணம், காலத்துக்கேற்பத் தன்னை மாற்றி நவீனமயமாக்கித் தற்காத்துக் கொண்டதுதான்.  பன்னீராயிரம் ஆண்டு இலக்கிய, இலக்கண வரலாறு பெற்றது தமிழ். 

  உலக நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ, கிரேக்கம், எபிரேயம், இலத்தீன், சீனம், அரபு ஆகிய மொழிகளோடு தமிழையும் செவ்வியல் மொழியாக ஏற்று அதன் தொன்மை, வரி வடிவம் ஆகியவற்றை ஆராய முற்பட்டது என அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா குறிப்பிடுகிறார். அதில் காலத்தால் மூத்தமொழியாக நம் தமிழ்மொழியை அவர்கள் கண்டார்கள். தேமதுரத் தமிழோசை இணையமெலாம் ஒலித்திடும் இந்தப் புதுயுகத்திலும் தமிழின் மிகப் பழைமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தையும் பத்துப் பாட்டு,எட்டுத் தொகை நூல்களையும் இன்றும் கற்கமுடிகிறது என்பது எத்தனை அழகானது! காலத்தால் மூத்த மொழி இன்றுள்ள நவீனஇலக்கிய வடிவங்களைத் தன்னகத்தே கொண்டு புதுமையாக இயங்குகிறது.லட்சக்கணக்கான பக்கங்களை இணையத்தில் கொண்ட உயர்தனிச்செம்மொழியாகவும் அமைகிறது.

நம் தாய்மொழியின் உயர்வுக்கு நாம் செய்யவேண்டியது?

முன்னேற்றத்தின் முகவரியாய் அமையும் தாய்மொழியைக் காப்பது நம் கடமை. எங்கும் தமிழ்,எதிலும் தமிழ் என்ற நிலையை நாம் உடன் நம் இல்லத்திலும் நம் உள்ளத்திலும் கொண்டுவரவேண்டும்.
நம்பிக்கை தரும் நற்றமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி கற்கவேண்டும்,அதன் இலக்கியச் செழுமையை நம் குழந்தைகளுக்குத் தினமும் கற்றுத்தரவேண்டும்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் ஒலித்து, இணையமெலாம் குவிந்திடும் வகையில் இணையத்தில் உள்ளிடப்படாத தமிழ் இலக்கியங்களைத் தேடிப்பிடித்து ஒருங்குறியில் பொருளுடன் உள்ளிட்டுப் பாதுகாக்கவேண்டும்.
திருக்குறளை உலக இலக்கியமாய் ஐக்கிய நாடுகள் சபை மூலம் அறிவிக்க முயற்சிகள் எடுக்கவேண்டும்.
தமிழகம் முழுக்க வணிகநிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இடம்பெறச் செய்யவேண்டும்.
நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழ் மொழியைக் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ் பயிலாமல் எந்தப் படிப்பும் படிக்க இயலாது என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும்.
தமிழ் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரவேண்டும்.
தொடர்வண்டி நிலையங்களில் விமானநிலையங்களில் வங்கிகளில் மத்திய மாநில அரசுநிறுவனங்களில் தமிழ் இடம்பெறவேண்டும்.
    இளநிலை படிக்கும் கல்லூரி மாணவ மாணவியரைக் கள ஆய்வில் ஈடுபடவைத்து, அந்தந்த வட்டாரம் சார்ந்த வட்டார வழக்குச் சொல் அகராதிகளைத் தொகுத்து இணையத்தில் அவற்றைச் சேமிக்க வகை செய்ய வேண்டும்.
மின்னணு வடிவத்தில் தமிழ்ப் படைப்பிலக்கியங்கள் அனைத்தையும் இணையத்தில் சென்று சேர்க்க ஆவன செய்ய வேண்டும்.  சில இணைய அன்பர்கள் இத்தொண்டினை எவ்விதப் பலனும் பாராமல் தற்போது செய்து வருகிறார்கள்.  சங்க இலக்கியமும், நீதி நூல்களும், பக்தி இலக்கியங்களும், சிற்றிலக்கியங்களும், நவீன படைப்பிலக்கியங்களும் இணையப்பக்கங்களில் சேமிக்கப்படும்போது கற்பித்தல் எளிமையாகிறது.
தமிழ் இலக்கியத்தைக் கற்றுத்தருவது இன்றைய சூழ்நிலையில் எழுத்துக்களைச் சார்ந்தும், சொற்களைச் சார்ந்தும் அமைகிறது.  தமிழ் இலக்கியங்களை ஒலிசார்ந்து கற்றுத் தருவதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் மொழி ஆய்வகம்ஏற்படுத்தப்பட்டுத் தமிழின் நுட்பமான தனித்துவம் எதிர்காலத்திலும் நிறுவப்பட வேண்டும்.  லகர, ளகர, ழகர வேறுபாடுகள் சார்ந்த இனிமை போன்றவற்றை மொழிஆய்வகம் மூலம் எதிர்காலத்தில் மிக நுட்பமாகக் கற்றுத்தரலாம்.
மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். .பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் சிலஆண்டுக்கு முன் ஆற்றிய உரையில், “உலகின் உன்னதமான திருக்குறள் மூலச் சுவடிகளை நாம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.  உடனடியாக அதைக் கண்டறிவது அவசியம்எனக் குறிப்பிட்டார்.  கண்டுபிடிக்கப்படாத சுவடிகளில் தமிழின் நாட்டார் பாடல்கள், சிற்றிலக்கியங்கள், சங்க இலக்கியச் செய்யுள்கள் இன்னும் பல தமிழகத்தின் கிராம, நகரப் பகுதிகளில் இருட்டறைகளில் மறைந்து கிடக்கின்றன.  அவற்றை எடுத்துப் பத்திரப்படுத்தி எதிர்கால ஊடகங்கள் மூலம் அடுத்த தலைமுறைக்குத் தர வேண்டும். மொழி நவீனமாகும் போது, பண்பாடு எழுச்சி அடைகிறது.
இதை நாம் செய்துமுடிக்க வேண்டும். விழுந்த விதையே மிகப்பெரிய மரமாகிறது,அழுந்த உழுதநிலமே சாகுபடி தரும் நெற்களஞ்சியமாகிறது. காலக் கரையான்களால் தின்றுவிடமுடியதா அக்கினிக் குஞ்சு நம் தமிழ்.மலர்ச்சியும் மகிழ்ச்சியும் நமக்கு நம் தாய்மொழியால்தான் என்ற உணர்வு நமக்கு வரவேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உரக்கச் சொன்ன சகோதரத்துவமும்  வீரமும் அன்பும் மனிதநேயமும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்குள் உரைந்திருக்கிறது என்பதை மறந்தது விந்தைதான்.
 தமிழ் என்றால் இனிமை என்பதோடு, இனி அனைத்தும் உள்ளடக்கிய நவீனப் புதுமை என்ற பொருள் புனையப்படட்டும். காகிதமில்லாப் புத்தகங்களிலும், தமிழ் நவீன மின்னணு அங்கியோடு இணைய ஆட்சி செய்யும்.  அன்று கணினி முன் எல்லாரும் கம்பராமாயணத்தைப் படக் காட்சிகளோடு ஒலி, வரி வடிவில் கற்பார்கள். காதறுந்த ஊசி கூடக் கால் முள்ளகற்ற உதவும்.

 எதுவும் வீணில்லை இந்த வாழ்க்கையில்.நகர்ந்து போகிற இந்த மனிதப் பிரவாகத்தில் நாம் நீண்ட தொடர்ச்சியின் கனிவான கண்ணிகள். நியாயவிலைக்கடைகளில் நமக்குப் பின்னிருப்போர் நம்மை முன்நோக்கி நகர்த்துகிற மாதிரி காலம் நம்மை நகர்த்தி நகர்த்தி முன்னெடுக்கிறது. இனம் தெரியாத மனிதர்களோடு சங்கமிக்க வைக்கிறது. மானிட சமுத்திரம் நானெனக் கூவக் கற்றுக் கொடுக்கிறது. தமிழால் நம்மை இணையவைக்கிறது. தமிழ் பேசுகிறோம் என்ற பெருமிதத்தைக் கொடுக்கிறது. “தமிழே உனக்காக” என்று உழைக்கவைக்கிறது.நாடுகளாலும் எல்லைகளாலும் தொலைவினாலும் துண்டுதுண்டாகிப் பிரிந்து கிடக்கும் தமிழினத்தைத் தமிழ் ஒன்று சேர்க்கிறது.
தமிழ் நம் உலகஅடையாளம் என்று ஒன்றாக இயங்கவைக்கிறது. தளர்ந்து கிடக்கும் மனங்களுக்குள் தன்னம்பிக்கையைப் பாய்ச்சுகிற வலிமை நம் அன்னைத் தமிழுக்கே உண்டு. தமிழ் நம் முகவரி, தமிழ் நம் இருப்பின் அடையாளம்.









  

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்