8.3.2018 அன்று தி இந்துவில் வெளியான கட்டுரை தொடர்பாக


2
..
           இணையக் கடிவாளம் இன்றைய தேவை

சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி

நம் விரல்நுனியில் தகவல்களைக் கொண்டுகொட்டும் இணையத்தின் இன்னொரு இருண்டபக்கத்தை இன்னும் அறியாமல்  நாம் நம் சொந்தத்தகவல்களை இணையதளங்களில் இட்டுநிரப்பிக்கொண்டிருக்கிறோம். 

அவை நம் தகவல்களை விற்று குருரப் பார்வையால் நம்மை வேவு பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஸ்மார்ட்போன்களின் கூட்டணியாக இணையம் மாறி நாம் செல்லும் இடம், பேசும் மனிதர்கள், நமக்கு விருப்பமான உணவுகள், நாம் தேடும் உடைகள் யாவற்றையும் நுட்பமாகப் பதிவுசெய்து வேண்டியவர்களுக்கு விற்றுக் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதை உணரமுடிகிறது.

 நிறுவனங்களின் கணக்கு வழக்குகள், நிறுவனங்களில் நடைபெறும் வாட்ஸ்அப் செய்தித்தொடர்புகள் எல்லாம் ரகசியமாக இன்னொரு நிறுவனத்திற்குக் கடத்தப்படுவதைக் காணமுடிகிறது. எல்லா நாடுகளிலும் ஜிமெயில் மூலமே நடைபெறும் செய்தி மற்றும் ஆவணங்களின் பரிமாற்றத்தின் நிலை இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. 

பணமில்லா மின்னனுப் பரிமாற்றத்தின் பாதுகாப்பு குறித்த ஐயம் இன்னும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. நம் படங்களைக் கொண்ட போலி முகநூல் பக்கங்களைக்காண முடிகிறது. செயலிகளின் பயன்பாடு கட்டுக்கடங்காமல் நம் அகவாழ்வையும் புறவாழ்வையும் பாதிக்கும் அளவுக்கு மாறிஇருக்கிறது. 

நாம் இணையதளங்களில் தேவையில்லாமல் கொட்டும் சுயதகவல்களால் நாமே கட்டுண்டுபோகும் நிலையில் வந்துநிற்கிறோம். திருமண வீடுகளிலிருந்து இறப்புவீடுகள் வரை நாம் எடுத்துத்தள்ளும் தற்படங்கள் எந்தப்பயனும் இல்லாமல் இணையக் குப்பைகளாகக் குவியத்தொடங்கியுள்ளன. 

நம் பிறந்தநாள் திருமண நாட்கள் வணிகநிறுவனங்களுக்கு விற்கப்பட்டு அங்கிருந்து தொடர்பில்லாமல் வாழ்த்து அட்டைகள் வந்து எல்லாம் வணிகமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மனிதசமூகத்தின் அங்கமாக இருந்த மனிதர்கள் வாட்ஸ்அப்பால் சாதி,மதம்,இனம், தெரு, குடும்பம், ஆண்,பெண் என்று குறுங்குழுக்களாகப் பிரிக்கப்பட்டுத் தேவையற்ற வதந்திகளை அறியாமல் பறப்பக்கூடியவர்களாக இணையம் ஆக்கிவைத்திருக்கிறது.

 இலவசமாகத் தரப்படும் இணையவசதிக்குப் பின்னால் அதிவேக செல்பேசிகளின் விற்பனைச் சந்தை மறைந்திருப்பதை மறுக்க முடியாது. மனிதர்களின் தனியுரிமைகளில் தலையிட்டு வந்த இணையநிறுவனங்கள் உலகநாடுகளின் பாதுகாப்பு விவகாரங்களிலும் தேர்தல்களிலும் தலையிடத்தொடங்கியுள்ள நிலையில் இணையங்களுக்குக் கடிவாளமிடாவிட்டால் பேரழிவு உறுதி.

Comments