உடைந்துபோன உரையாடல் .....சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி



வராதவரின் வருகையின்மை குறித்தே தொடங்கியது
வந்த என்னிடம் தொடங்கிய முதல் பேச்சும் கூட.
தேநீர் வருவதற்குள் அறையைப் படம்பிடிக்கின்றன
வண்ணத்துப்பூச்சியாய் படபடக்கும் கண்கள்.
தொலைபேசி அழைக்கிறது பலமுறை.
மெதுவாய் பிஸ்கட் உண்டு,மாம்பழத்துண்டுகள் புசித்து
வாசலில் குதித்த பூனை பார்த்து
நான் மனதாரப் பேசத்தொடங்குவதற்குள்
மணியாகிவிட்டது
மணியாச்சியில் முத்துநகர் பிடிக்கவேண்டும் என்றார்.
பேசநினைத்த சொற்கள் பெருங்குரல்
எடுத்தழுதபடி புறவாசல் வழியே போய்க்கொண்டிருந்தது.

Comments