டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ..மாற்றுத்திறனாளிகளை மனம்திறந்து ஊக்குவிப்போம்
http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2016/12/02/ArticleHtmls/02122016010003.shtml?Mode=1
மாற்றுத்திறனாளிகளை மனம்திறந்து ஊக்குவிப்போம்
முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,சதக்கத்துல்லாஹ்
அப்பா கல்லூரி,திருநெல்வேலி 9952140275
இறைவன் தந்த இனிய வரம் இந்த அழகிய வாழ்க்கை. சில நேரங்களில், சில
காரணங்களால் சிலர் மாற்றுத் திறனாளிகளாய் பிறந்துவிடுகின்றனர், அல்லது சில
விபத்துகள் அப்படி ஆக்கிவிடுகின்றன.
பூச்சியாய் பிறந்தாலும் தளராது பறக்கிறது
தட்டானெனும் தன்னிகரற்ற பறவை. தட்டானே எல்லாவற்றையும் விட்டு விடுதலையாகி சுதந்தர
வானில் சுற்றித் திரியும்போது நாமேன் கவலைப்படவேண்டும்? உலகமே போற்றிப்புகழும்
ஆற்றல் பெற்ற மாற்றுத்திறனாளிகள் ஏன் ஏன் வருந்தவேண்டும்?
நொந்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன?
கசந்த வாழ்க்கையை வசந்த வாழ்க்கையாய்
மாற்றும் மூன்றாம் கையான நம்பிக்கையை மறந்துவிட்டு அவர்கள் ஏன் வருத்தத்தின் வாசலை
தன் நிறுத்தத்தின் வாசலாய் எண்ணிக்கொண்டு துயர்படவேண்டும்? புழுவுக்கு ஆசைப்பட்டு
தூண்டில் கொக்கியில் தொங்கிக்கொண்டிருக்கிற மீன்களாய் ஏன் மாறவேண்டும்?
மறுப்பேதும் சொல்லாமல் வெறுப்பேதும் கொள்ளவேண்டாம். நம்மையே நாம் நொந்து
கொள்ளவேண்டிய அவசியம் என்ன?
கவலைவேண்டாம்
புறக்கணிப்புகள்கூடப் புரிதல்களோடே
செய்யப்படுகின்றன, இருக்கிற இனிய வாழ்வுப்பொழுதுகளில் வெறுக்கிற சொற்களை வேகமாய்
வீசுகிற மனிதர்கள் குறித்துக் கவலைவேண்டாம். நம் மனதில் பாரங்களை ஏற்றிய பாவங்களை
அவர்கள் சுமந்துபோகட்டும். அவர்கள் சொன்ன சுடுசொற்களை மனதில் தேக்கி அவர்களுக்கு
முன் சாதித்துக் காட்டுங்கள். உங்கள் திறன்களுக்கு நீங்கள் ஒருபோதும் திரைபோட்டு
மறைக்கவேண்டாம். நம்மை ஏன் புறக்கணிக்கிறார்கள் என்று ஒருபோதும் நினைக்கவேண்டாம். ஜன்னலில்
தெரியும் மின்னல் மாதிரி இன்னலில் தெரிகிறது என் வாழ்க்கை என்று இனியும்
சொல்லவேண்டாம்.
தடையாளக் கற்றுக்கொள்ளுங்கள்
மாற்றுத்திறனாளிகளின் அடையாளம்
தடையாளும் அடையாளம். கூர்மையான அலகுகளால் அழகாகக் கொத்துகிற குட்டிக்குருவிகள்
கூடத் தங்கள் பசியகற்றும் தானியங்களை நோக்கித் தானே பறக்கும்போது நாம் ஏன் சோகமாய்
இருக்கவேண்டும்? எல்லாத் தடைகளையும் வலியோடும் வலிமையோடும் எதிர்கொண்டு
முயற்சித்தேரை வடம்பிடித்து இழுபவர்களே சாதனை வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள். கவலைப்படும்போது
நாம் கரையானுக்கு இரையாகிற மரக்கட்டைகளைப் போல் மாறிப்போகிறோம். நம்மையே நாம்
நொந்துகொள்ளும்போது, கைதவறிய மூட்டையிலிருந்து சிதறிப்போகிற சிறுஉருண்டைகள் மாதிரி
உதறிப்போகிறது இந்த வாழ்க்கை.
சாதனை மலர்கள்
காத்திருக்கிற சமுதாயத்தின் முன் பூத்திருக்கிற
சாதனை மலர்கள் மாற்றுத்திறனாளிகள். சில சாதனைகளால் அவர்கள் வியக்க வைகிறார்கள்,
சில நேரங்களில் உற்சாகத்தால் அவர்கள் நம்மை இயக்கவைக்கிறார்கள். ஊசியோடு உடன்
ஊர்ந்து போகிற நூல் மாதிரி ஆசையோடு ஊர்ந்து நகர்கிறது சாதனை படைக்கவேண்டும் என்கிற
விந்தைமனம். விரிவானைவிட்டு
விட்டுவிடுதலையாகிற மழைத்துளிகள் மண்ணில் பட்டவுடன் ஆறாக ஓடி அருவியாய் விழுந்து
கடலாய் பரந்துவிரியவில்லையா?
தயக்கம் வேண்டாம்
நமக்குள் ஏன் இந்தத் தயக்கம்?
கொட்டிச் சிதறும் அருவி நீர் குளத்து நீராய் எப்படிக் கட்டிக்கிடக்கச்
சம்மதிக்கும்? எப்போதும் பயணப்படுகிறவர்களின் பாதங்களே பக்குவமாயிருக்கும்.சென்று
கொண்டே இருக்க வேண்டும் இல்லையேல் நின்றுபோனால் காலம் நமைத் தின்றுபோகும். வாளோடு
வாழ்வதில்லை வாழ்க்கை,வலிமையோடு வாழ்வதே வாழ்க்கை. உள்ளுக்குள் கொடுக்கோடு நம்மால்
எப்படி உற்சாகமாய் இருக்கமுடியும்? துரத்திக்கொண்டே இருக்கிறது வாழ்க்கை,
பயந்துபோய் பயணிப்பவனிடம்.
உழைப்பில் இன்பம் காணலாம்
அலைகளோடு அலைகிற மீன்கள் மாதிரிக் கலைகளோடு
அலையலாம் தவறில்லை, பேனா விற்கலாம் தவறில்லை, நாற்காலிகள் கட்டில்கள் பின்னலாம்
தவறில்லை, ஊதுபத்தி விற்கலாம் தவறில்லை, மற்றவர்களை ஏமாற்றாமல் நம் திறன் காட்டி
உழைத்துப் பிழைக்கும் எந்த உழைப்பும் கேவலமில்லை. ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிபெற்று
மாவட்ட ஆட்சித்தலைவராக மாவட்டத்தையே வழிநடத்தலாம் தவறில்லை. இரண்டு சூரியன்களை
இமைக்குள்ளே இருதிக்கொண்டு இருளில்
இருப்பதாய் இனியும் ஏன் சொல்லவேண்டும்?
ரசித்துச் செய்யுங்கள்
நம் விருப்பம் நம் வாழ்வில் திருப்பம் தரலாம். எனவே
செய்கிற எந்த வேலையையும் ரசித்துச் செய்யுங்கள். அந்த வினாடியில் வசித்துச்
செய்யுங்கள். நம்மால் எப்படி இதைச் செய்யமுடியும்? என அஞ்சவேண்டாம். பாதைகளற்ற பயணத்தில்
அனுபவங்களே பாதங்கள். எல்லோருக்குள்ளும் ஏதேதோ ஏமாற்றங்கள் ஆனாலும் மென்று முழுங்கிவிட்டு மெல்லநகர்கிறோம் எல்லோரும். எனவே எதையும் எடுத்துக்கொள்வதில்தான்
எல்லாமிருக்கிறது.
ஓட்டிக்கொண்டே இருக்கிறது வாழ்க்கை ஓடிக்கொண்டேயிருக்கும்
வரை.
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி
நிலையங்கள்
உலகஅளவில் சுமார் 20 விழுக்காடு
மக்கள் மாற்றுத்திறனாளிகளாய் உள்ளனர். இந்தியாவில் சுமார் 7 கோடி
மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் சகமனிதர்களிடம் எதிர்பார்ப்பது
பொன்னோ பொருளோ அன்று, அன்பையே அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே.
அவர்களின் திறன்களை வெளிக்கொணர சிறப்புக்கல்வி தரும் கல்விநிறுவனங்கள் உருவாதல் அவசியம்.
அறியாமை இருளகற்றி அறிவொளி வீசவைக்கும் வல்லமை கல்விக்கு மட்டுமே உண்டு.
சென்னையில் செயல்படும் நிறுவனம்
விழித்திறன் குறைந்தோர்,செவித்திறன்
இழந்தோர், வாய் பேச இயலாதோர்,மனவளர்ச்சிக் குன்றியோர்,மூளை நரம்பு செல்களில்
ஏற்படும் பாதிப்பால் உருவாகும் ஆட்டிசம் எனும் புறஉலகச்சிந்தனைக்குறைவு போன்றவற்றை
எதிர்கொள்வதற்கான தனித்தனியே கல்விமுறைகளும் தனித்தனிக் கல்விநிறுவனங்களும் நம்
மாநிலத்தில் உள்ளன. மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கான
பயிற்சியை மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டு தேசிய நிறுவனம் சென்னை கோவளம்
முட்டுக்காடு அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் 15 ஏக்கரில் செயல்பட்டுவருகிறது.
இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரிப்பள்ளி செயல்படுகிறது.
சிவசைலம் சாந்தி இல்லம்
திருநெல்வேலி மாவட்டம்
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலத்தில் சாந்தி இல்லம் எனும் செவித்திறன்
இழந்தோர் மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகளுக்கான சிறப்புப்பள்ளி சிவசைலம் ஔவை
ஆஸ்ரமம் மற்றும் திண்டுக்கல் காந்திகிராமப்பல்கலைக்கழக உதவியோடு செயல்பட்டு
வருகிறது. நூற்றுக்கணக்கான செவித்திறன் இழந்த குழந்தைகளுக்குப் பயிற்சிதரும்
சிறப்புப்பள்ளி அங்கே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது
ஆயக்குடி அமர்சேவா சங்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடியில்
சமூகசேவகர் மாற்றுத்திறன் சாதனையாளர்கள் ராமகிருஷ்ணன், சங்கரராமன் ஆகியோரின்
வழிகாட்டலில் செயல்பட்டுவரும் அமர்சேவா சங்கத்தில் நூற்றுக்கணக்கான
மாற்றுத்திறனாளிகள் பல்வேறு தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்று
வருகின்றனர்.மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளி அங்கே சிறப்பாகச்
செயல்பட்டுவருகிறது. புதுடெல்லி இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின்
படிப்புமையமாகவும் அமர்சேவா சங்கம் செயல்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்குக் கணினிப்
பயிற்சியினை வழங்கிவருகிறது.
மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும்
சவால்கள்
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 3 தேதியை
உலக மாற்றுத்திறனாளிகள் தினமாய் கொண்டாடினாலும் இன்னும் அவர்களுக்கான சிரமங்களைச்
சமூகம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது வருத்தம் தரும் உண்மைதான்.
பேருந்து நிலையங்களில் அவர்களுக்கான சிறப்பறைகள்
கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டாலும் உயரமான படிக்கட்டுகளை உடைய பேருந்துகளில்
அவர்களால் ஏறமுடியாத அவலநிலைதான் இன்னும் உள்ளது.
பொதுமக்கள் கூடும் பொது இடங்களில்
இன்னும் அவர்கள் எளிமையாகப் பயணிக்கும் சரிவுப்பாதைகள் அதிகமாய்
ஏற்படுத்தப்படவில்லை.
விழித்திறன் இழந்தோர் தேர்வு எழுத
உதவியாளர் தேவை என்பதால் பல கல்வி நிறுவனங்கள் அவர்களைப் பயிலச் சேர்த்துக்கொள்வதே
இல்லை.
விழித்திறன் குறைந்தோர் பயிலும் பள்ளிகள்
தமிழ்நாடெங்கும் உருவாகவில்லை.அவர்களுக்கான பிரெய்லி எழுத்தில் தயாரிக்கப்பட்ட
நூல்களும் தமிழில் குறைவு.
நடக்க இயலாதோருக்குப் பயிற்சிதரும்
இயன்முறை மருத்துவர்களைத் தன்னகத்தே பெற்ற மாற்றுத்திறன் படைத்தோருக்கான மையங்கள்
இன்னும் அதிகாமாக ஏற்படுத்தப்படவேண்டும்.
ஆட்டிசம் எனும்
புறஉலகச்சிந்தனைக்குறைவு உள்ள நிலையில் இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் உள்ள
நிலையில் அவர்களுக்கு சிறப்புப்பயிற்சி தரும் சிறப்பாசிரியர்களைக் கொண்ட
சிறப்புப்பள்ளிகள் இன்னும் அதிகாமாய் உருவாக்கப்படவேண்டும்.
மனம் உடைந்து போகும் மாற்றித்திறனாளிகளுக்குத்
தன்னம்பிக்கையூட்டும் தன்னம்பிக்கை மையங்கள் அதிகமாய் உருவாக்கப்படவேண்டும்.
சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகள் மகத்தான
சாதனையாளர்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி அருணிமா
சின்கா ரயில்விபத்தில் துண்டான தன் வலதுகாலின் வலியைச் சற்றும் பொருட்படுத்தாமல்
இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தாரே.
சமூக சேவகர் பாலம் கலியாணசுந்தரம்
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரி நூலாகராய்
பணியாற்றிய சமூக சேவகர் பாலம் பா.கலியாணாசுந்தரம் பிறவியிலிருந்தே குரல்
பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி,ஆனால் எந்தவித தாழ்வு மனப்பான்மையுமின்றி திடமான
மனத்தோடு பள்ளி நாட்களிலிருந்தே சமூகசேவையில் ஈடுபட்டார். திருமணமே
செய்துகொள்ளாமல் மக்களுக்காகத் தொண்டாற்றி வருகிறார். தான் பணிக்குச் சேர்ந்த நாள்
முதலாய் இன்று ஓய்வூதியம் பெருகிற தொகை வரை ஆதரவற்றோர் நலனுக்காகவே செலவிடும்
சமூகசேவகர் பாலம் கலியாணசுந்தரம் பெயர் சமூகசேவைக்காக மூன்றுமுறை கின்னஸ்
உலகசாதனையில் பதிவானது.முன்னாள் சனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமும் திரைப்பட
நடிகர் ரஜினிகாந்தும் போற்றிய உலகசாதனையாளர் சமூகசேவகர் எழுபது வயதைக் கடந்தும்
இன்றும் சென்னையில் பாலம் எனும் சமூகசேவை இயக்கத்தை நடத்திவருகிறாரே.
பேராசிரியர் ஸ்டீபன் ஹோக்கிங்
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில்
பேராசிரியராகப் பணியாற்றும் ஸ்டீபன் ஹோக்கிங் 21 வது வயதில் அமையோட்ரோபிக்
லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் எனும் நரம்புத்தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுக் கைகால்கள்
செயல்இழந்து, பேசும்திறனையும் இழந்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.
கணினியின் உதவியோடு தான் சொல்வதை மற்றவர்களுக்குப் புரியவைக்கும் திறனை
வளர்த்துக்கொண்டார். உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர்
ஆய்வுகளைக் கைவிடவில்லை.அண்டவியல், குவாண்டம் ஈர்ப்பு என்ற துறைகளில் இவர் ஆய்வுசெய்து சொல்லியுள்ள
ஆய்வுமுடிவுகள் விஞ்ஞானிகளால் முக்கியமனதாகக் குறிப்பிடப்படுகிறது. உலகின்
ஆய்வறிஞராக அவர் மாறிப்போனார். அவர் எழுதிய ‘நேரத்தின் சுருக்க வரலாறு’ எனும் நூல்
உலகப்புகழ் பெற்றது. அவர் எந்தநிமிடத்திலும் தன் குறைகுறித்து வருந்தியதோ தன்னை
நொந்துகொண்டதோ இல்லை. சிறைக்கம்பிகளுக்குப் பின்னா சிட்டுக்குருவிகள் இருக்கும்?
விட்டுவிடுதலையாகி விரிவானில் சிறகடித்த சிந்தனைப் பறவையவர். சமவெளிகளில்
சாதாரணமாய் ஓடும் நீர்தான், அருவியாய் விழும்போது ஆர்ப்பரிப்போடு
கொட்டித்தீர்க்கிறது. உடல் குறையை வென்ற பேராசிரியர் உலகின் அறிஞர்கள் மனதையும்
தன் ஈடுஇணையற்ற உழைப்பால் வென்றார்.
கரங்களின்றி விமானம் ஓட்டிக் கின்னஸ் சாதனை
செய்த ஜெசிக்கா காக்ஸ்
அமெரிக்க நாட்டின் அரிசேனா நகரில் பிறந்தபோதே
கைகள் இல்லாத குழந்தையாகப் பிறந்த ஜெசிக்கா காக்ஸ் வானில் பறக்க ஆசைப்பட்டார்.
அவர் இளமைக் காலத்தில் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள் மற்றும் பயிற்சிகளின் மூலம்
2008 ஆண்டு விமான ஓட்டிக்கான உரிமம் பெற்றார். பத்தாயிரம் அடி உயரம் பறக்கும் இலகு
ரக விமானத்தை மிகத்திறனோடு ஓட்டிச் சரித்திரத்தில் இடம்பெற்றார். தன்னம்பிக்கையோடு
பேசிக் கேட்போரை எழுச்சியடையச் செய்யும் ஜெசிக்கா காக்ஸ் மாற்றுத்திறனாளியாய்
விமானம் ஓட்டியவர் என்ற சிறப்பின் மூலம் கின்னஸ் சாதனையாளர் பட்டியலில்
இடம்பெற்றார்.
நம்பிக்கையோடு ஓடிய சாதனனையாளர் டெர்ரி பாக்ஸ்
கனடாவைச் சார்ந்த உலகப்புகழ் பெற்ற தடகளவீரர்
டெர்ரி பாக்ஸ் புற்றுநோயில் தனது வலதுகாலை
இழந்தார். நம்பிக்கையோடு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும் ஆய்வுகள்
நிகழ்த்துவதற்காக 1980 இல் கனடாவில் நம்பிக்கை நெடுந்தொலைவு நிகழ்வில் ஒற்றைக்
காலோடு 143 நாட்கள் ஓடினார். காலைப் பாதித்த புற்றுநோய் அவரது நுரையீரல்வரை பரவி
எலும்புப் புற்றுநோயால் 143 வது நாளில் 22 வது வயதில் இறப்பைச் சந்தித்தார்.
ஒற்றைக்காலில் அவர் நிகழ்த்திய சாதனையின் விளைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும்
ஆய்வுகளுக்காக அதன்பின் அறுபதுநாடுகள் பங்கேற்ற நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயம்
நடத்தப்பட்டு 500 மில்லியன் கனடிய டாலர் நிதி திரட்டப்பட்டது.
நண்பர்களே
நாம் நினைத்தால் எதுவும் சாத்தியம்தான். உடல்
தடைகள் நம் உறுதியை உருக்குலைத்துவிடமுடியாது. உளத்தில் ஒளி உண்டானால் நாம் பேசும்
சொற்களிலும் ஒளி உண்டாகும். ஒருமுறை மட்டுமே வாழக்கிடைக்கிற இந்த அரிய வாய்ப்பை
நாம் கவலைகளின் கலவைகளால் ஏன் இட்டு நிரப்பவேண்டும். மாற்றுத்திறனாளிகளே! போற்றிப்
புகழ்கிறோம் உங்கள் உயர்திறன்களை சாதனை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது வாருங்கள்
தொடங்கலாம்.
Comments
Post a Comment