தமிழ் நம் தடையகற்றும் அடையாளம்

உலகத் தாய்மொழி நாள் சிறப்புக்கட்டுரை ( பிப்ரவரி 21)
  http://www.dinamalar.com/news_detail.asp?id=1717447
      
பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், 
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, 
திருநெல்வேலி, 9952140275


தாயிடமிருந்து நாம் கற்றமொழி, தாயாக நம்மைப் பெற்ற மொழி நம்மருமைத் தமிழ்மொழி. “தமிழ்..தமிழ்” என்று தொடர்ந்து சொன்னால் “அமிழ்து அமிழ்து” என்று நம் காதுகளில் தேனாய் ஒலிக்கிறது. உலகமொழிகள் ஆறாயிரத்திலும் சிறந்தமொழி நம் அன்னைத் தமிழ்மொழி. எளிமையும் இனிமையும் நீர்மையும் கொண்ட உலகின் ஒப்பற்ற மொழி நம் தமிழ்மொழி.

திராவிடமொழிகளின் தாய்
பலநூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான மொழிகளான கிரேக்கமும் எபிரேயமும் இலத்தீனும் இன்று பேசுவதற்கு அதிக மக்களின்றித் தவித்துக் கொண்டிருக்கப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் தாய்மொழியான தமிழ் இன்றும் இணையத்தின் இதயத்தில் இதமாய் வீற்றிருக்கிறது. திராவிடமொழிகளின் தாயாகத் திகழும் நம் தமிழ்மொழி சொல்வளமும் பொருள்வளமும் மிக்கதாக இன்றும் இளமையோடும் இனிமையோடும் திகழ்கிறது.

மொழி எனும் சொல்லுளி
மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துவது பேச்சாற்றல்தான். அப் பேச்சு மொழியின் பெருவரம். உள்ளுக்குள் உறைந்திருக்கும் உயிர்மாதிரி நம் சொல்லுக்குள் மறைத்திருகிறது நம்மருமைத் தமிழ். மொழி என்பது வெறும் தகவல்தொடர்பு வாகனமன்று அது நம் அழிக்கமுடியா அடையாளம். தாலாட்டு முதல் இறுதிநாளில் ஒப்பாரி வரை யாவும் மொழியின் வழியில்தான் நடக்கிறது. மொழி, பண்பாட்டைச் செதுக்கும் சொல்உளி.மொழி நம் சமூகத்தின் மூன்றாம்விழி. 
மொழியின் விழியில்தான் நாம் நம் இந்த வாழ்வின் வழியைக் கண்டடைகிறோம்.

எழுத்துகளின் கழுத்துகளில்தான் நாம் சொல்லவிரும்பும் கருத்துகளே வீற்றிருக்கின்றன. திருவள்ளுவரின் ஈரடி வெண்பாக்கள் அறத்தின் திறத்தை அவனிக்குக் காட்டின. பாரதியின் கவிமொழி விடுதலைக்கான விதையை மக்கள் மனதில் விதைத்தது.பாவேந்தரின் தீந்தமிழ்க் கவிதைகள் தமிழினத்துக்குப் புத்துயிர் தந்தன. தாகூரின் நேசமொழி அவரை நோபல்பரிசு வரை அழைத்துச் சென்றது. டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பொன்மொழிகள் மாணவர்களைச் சாதனை படைக்கத்தூண்டிச்சென்றன. ஆக மொழியால் எல்லாம் செய்யும் வலிமை மிக்கது.

மொழி எனும் பெருவரம்
மொழி, அறிவை வளர்க்கும் அற்புத ஊக்கவரம். மொழிக்கு நாம் செய்யும் கைம்மாறு இறுதிவினாடி வரை அம்மொழியைச் சரியான உச்சரிப்போடு பிழையின்றி அழகாகப் பேசுவதுதான். தாயை நேசிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் நம் தாய்மொழியை நேசிப்பதும் அவ்வளவு முக்கியம்.

 ஞானம் தரும் மொழிதான் நம் இனத்தின் மானம் காக்கிறது. சிந்திக்கக் கற்றுத்தரும் மொழிதான் பல சவால்களைச் சந்திக்கும் உறுதியை உள்ளத்திற்குத் தருகிறது. தங்கத்தை விட மதிப்பானது தங்கள் தாய்மொழி  என்று உணரும் சமுதாயம், வைரத்தைவிட வலிமையானதாய் வளர்ந்தோங்குகிறது. முழுமையை நோக்கிய முன்னேற்றம் மொழியை விழியாக்கி வளர்வதில் இருக்கிறது.

பழமையான மொழி
தாயிடமிருந்து உடலும் உயிரும் வந்ததைப் போல் தாயிடமிருந்து உயிரும் மெய்யும் மொழியாய் வந்தது, அவள் உதடு குவித்தபோது உயிர் எழுத்தும் மெய்தீண்டி முத்தமிட்டபோது மெய்யெழுத்தும் மெல்ல வந்தது. நாம் வேற்றூரில் இறங்கி வாய்திறந்து பேசும்போது நாம் எந்த வட்டாரம் சார்ந்தவர் என்பதை நாம் பேசும்மொழி வெளிக்காட்டிவிடுகிறது. இந்தியாவில் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகள் 22 இருந்தாலும் அவை எல்லாவற்றையும்விடத் தமிழ் காலத்தாலும் இலக்கிய வளமையாலும் முந்தியது. 6200 மொழிகள் பேசிய உலகில் இன்று 3000 மொழிகள் மட்டுமே நிலைபெற்றுள்ளன. எஞ்சிய மொழிகளைக் காக்கவும் அவற்றின் தொன்மையை உலகுக்கு உணர்த்தவும் யுனஸ்கோ எனும் உலகஅமைப்பு பிப்ரவரி 21 ஆம் நாளை உலகத் தாய்மொழிநாளாக அறிவித்துள்ளது.

இலக்கிய வளம்
ஒருமொழியின் வலிமையையுணர அம்மொழியில் இறவாப் புகழ்பெற்ற படைப்பிலக்கியங்களைப் படைப்பதும், அம் மொழியில் உள்ள ஒப்பற்ற இலக்கியங்களை ஆழமாகப் படிப்பதுதான். எப்படியும் வாழலாம் என்று வாழ்ந்த மனிதஇனத்தை இப்படித்தான் வாழவேண்டும் என்று உயரிய மதிப்பீடுகளைத் தந்து வாழக்கற்றுத்தரும் நீதிஇலக்கியங்களை நமக்குத்தந்த மொழி நம் தமிழ்மொழி.

பூவாரம் சூட்டி இறைவனைத் துதித்தோருக்கு மத்தியில், வாடாத சந்தத்தமிழ்ச் சொல்லெடுத்துத் தேவாரத்தால் பாமாலை சூட்டும் மொழி நம் தமிழ்மொழி. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க இலக்கியத்தால் ஓராயிரம் நற்பண்பாடுகளை நமக்குத் தந்த மொழி நம் தமிழ்மொழி. சிலம்பும் மேகலையும் சிந்தாமணியும் கம்பநாட்டாழ்வாரின் கம்பராமாயணமும் தேம்பாவணியும் சீறாப்புராணமும் தமிழின் காப்பியச் செழுமையை இன்றும் உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

 பழைய இலக்கியங்களுக்குப் போட்டியாக உலகத்தரத்தில் அமையும் நவீன இலக்கியங்களும் தமிழில் நூறாண்டுகளாகத் தோன்றித் தொடர்கின்றன. 1955 இல் முதல் சாகித்ய அகாடெமி விருதினைத் தமிழுக்குப் பெற்றுத்தந்த சொல்லின்செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையிலிருந்து 2016 ஆம் ஆண்டுக்கான விருதினை “ஒரு சிறுஇசை” எனும் சிறுகதைத் தொகுதிக்காகப் பெறும் எழுத்தாளர் வண்ணதாசன் வரை, தாய்மொழிக் கல்வியில் பயின்று படைப்பிலக்கியங்கள் படைத்துவரக்கூடிய சிறந்த படைப்பாளர்களைத் தமிழ் பெற்றிருக்கிறது.

இணையத்தமிழ்

முத்தமிழோடு நவீன இணையஊடகத்தின் வரவால் இணையத் தமிழ் எனும் நான்காம் தமிழ் உருவாகி இணையப் பக்கங்களில் இடம்பிடித்து இனிமையாக வீற்றிருக்கிறது. காலத்திற்கேற்ப தமிழ் தன்னைப் புதுப்பித்து வந்திருக்கிறது என்பதற்கு சான்று இணையத் தமிழ் எனும் புதியதுறை. அன்னைத் தமிழுக்கு இன்னும் சிறப்புச் செய்யவேண்டும் என்கிற உயரிய நோக்கில் தொல்காப்பியம் முதல் நவீன புதுக்கவிதை வரை யாவும் ஒருங்குறியில் இணையத்தில் உள்ளிடப்பட்டுத் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்யப்பட்டிருக்கிறது.  

புலம்பெயர்ந்த தமிழர்கள்
திருக்குறளும் ஆத்திசூடியும் அரபுமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு உலகத்தமிழர்களின் சொத்தாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்குத் தாய்மொழியைக் கற்பிக்கவேண்டும் என்ற நன்நோக்கில் அடிப்படைத் தமிழ் கற்பிக்கும் இணையதளங்கள் உருவாக்கப்பட்டு இணையம் மூலமாய் தமிழ் தெளிவாகக் கற்பிக்கப்படுகிறது. மலேசியநாட்டில் 550 மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டு மிக அழகாகத் தாய்மொழிக் கல்வி வழங்கப்படுவதைக் கடந்தஆண்டு ஒன்பதாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்றபோது நேரில் தெரிந்துகொள்ள முடிந்தது. மின்னஞ்சல் முதல் முகநூல், கட்செவியஞ்சல், ட்விட்டர், வலைப்பூக்கள் வரை எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று இளையதலைமுறை இணையத்தில் நம் இன்பத்தமிழை வீற்றிருக்க வைத்திருப்பதை பார்க்கமுடிகிறது.

தாய்மொழிவழிக்கல்வி
உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகளின் வெற்றி அவர்களின் தாய்மொழி வழிக்கல்வியில்தான் உள்ளது. அமெரிக்க நாட்டில் அவர்களின் தாய்மொழியான ஆங்கிலமும், வளைகுடா நாடுகளில் அரபும், ஜெர்மன் நாட்டில் ஜெர்மானிய மொழியும் தென்கொரியாவில் கொரிய மொழியும் பயிற்றுமொழியாய் திகழ்வதால் அந்நாட்டுக் குழந்தைகள் எளிதாகக் கல்விகற்க முடிகிறது. எந்தநாட்டில் தாய்மொழிவழிக்கல்வி முன்னிலைப் படுத்தப்படுகிறதோ அந்த நாட்டில் அறிவுப்புலம் பரந்துவிரியும். நாம் இன்னும் தாய்மொழி வழிக் கல்வியை வளர்க்கவேண்டிய நிலையில் உள்ளோம்.

கலைச்சொல்லாக்கம்
அறிவியல் வளரவளர மொழியும் அதற்கு ஈடுகொடுத்து வளர்வதைக் காணமுடிகிறது. தமிழில் “சொல்லுதல்” என்கிற  சொல்லுக்கு அறைதல், செப்புதல், மொழிதல், இயம்புதல், நவிலுதல், பகர்தல், சாற்றுதல், என்பன போன்ற 39 இணைச்சொற்கள் உண்டு. இடத்துக்குத் தக்கவாறு அந்தந்தச் சொற்களைப் பயன்படுத்தும் வகையில் சொல்வளம் மிக்க மொழியாக நம் தாய்மொழி திகழ்கிறது.

புதியகண்டுபிடிப்புகள் வரவர அவற்றை அழகுதமிழில் மிக எளிமையாக விளக்க அழகான தமிழ்க்கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டு இணையதளங்களில் உள்ளிடப்படுவதால் பிறமொழிக் கலப்பின்றிப் பேசுவும் எழுதவும் முடிகிறது. அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அறிவியல், மருத்துவம், கணினி, தொழில்நுட்பம் சார்ந்த எட்டுக் கலைச்சொல் அகராதிகளைத் தமிழுக்குத் தந்தார். எழுத்தாளர் சுஜாதா எளிமையான தமிழில் மிகக் கடினமான அறிவியல் கருத்துகளைத் தொடர்ந்து எழுதினார்.இம்முயற்சியைத் தொடரவேண்டியுள்ளது.

தாய்மொழியில் பேசுவோம்

தொன்மையும் தொடர்ச்சியும் உடையமொழி நம்  தமிழ்மொழி. ஒரு பண்பாட்டினை அழிக்க முயல்பவர்கள் முதலில் மொழியைத்தான் அழிப்பார்கள். மொழியை அழிப்பது ஓர் இனத்தின் அடையாளத்தை அழிப்பதேயாகும், நம் தாய்மொழி அடையாளத்தை அழிப்பது நம்மை அழிப்பதற்கு ஒப்பானதாகும்.வெறும் பேச்சோடு இல்லாமல் இந்தநாளிலிருந்து நாம் சிலவற்றை மாற்றினால் என்ன?

 செல்பேசியில் பேசும்போது ஹலோ என்ற சொல்லுக்குப் பதில் “வணக்கம்..சௌந்தர மகாதேவன் பேசுகிறேன்” என்று தமிழில் பேசி நம் உரையாடலைத் தொடங்கினால் என்ன? வீடுகளில் தமிழில் பேசுவோம், கூட்டங்களைத் தமிழில் நடத்துவோம். நம் பெயர்ப் பலகையைத் தமிழில் தருவோம். நம் சந்திப்பு அட்டைகளை அழகுதமிழில் உருவாக்குவோம். நம் முகநூல் பக்க முகவரியைத் தமிழில் தருவோம். கணினியில் தமிழ் எழுத்துருக்களை நிறுவி அழகுதமிழில் கட்டுரைகளைத் தட்டச்சு செய்வோம். நம் வங்கிச் செயல்பாடுகளைத் தமிழுக்கு மாற்றுவோம், 

தமிழில் ஒப்பமிடுவோம், நண்பர்களோடு நாளும் நல்ல தமிழ்ச்சொற்களைப் பகிர்ந்து கொள்வோம். தமிழ்ச் செய்தித்தாட்களை வாங்கித் தினமும் வாசிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவோம். தெருக்களின் பெயர்களைத் தமிழுக்கு மாற்ற முயற்சி எடுப்போம். சிங்கப்பூரில் வானூர்தி நிலையம் முதல் தெருக்கள் வரை எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று இருப்பதைப் போல் நாமும் செயல்படுத்துவோம்.

தமிழ்மரபுகளைக் காப்போம்

மொழி நம் பண்பாட்டின் வேர், ஈராயிரம் ஆண்டுகளாய் நம் பண்பாட்டை ஈரமாய் வைத்திருப்பதும் அதுதான். காற்றின் திசையறிந்து அவர்கள் நாவாய்களைச் செலுத்திக் கடல்கடந்தும் வணிகம் செய்தனர். இங்கிலாந்தின் பக்கிம்காம் அரண்மனையில் காவலர்கள் பணிமுடிந்து செல்வதைக்கூட அந்நாட்டோர் அற்புதமாய் காட்டிக்கொண்டிருக்க ஆயிரம்ஆண்டுகள் கடந்த தமிழ்க் கல்வெட்டு எழுத்துகளைச் சிதைக்க நாம் எப்படிச் சம்மதித்தோம்?

வெளிச்சத்தை உலகுக்குக் கற்றுத்தந்த விருட்சம் இருளில் இருக்கச்சம்மதித்தது யுகச்சோகம்தான்.  ஈராயிரம் ஆண்டுகளின் தொன்மையும் தொடர்ச்சியும் உடைய பேரினம் தமிழினம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்க்குடி. காதலையும் வீரத்தையும் இருகண்களாகக் கொண்ட நம் பண்பாட்டின் வேர்களையும் நம் தாய்மொழியின் கருவூலமான மரபுகளையும் காக்கவேண்டிய நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். துள்ளிக்குதித்து ஓடும் சல்லிக்கட்டுக்காளையைத் தன் வீரத்தால் தள்ளிநிறுத்தி அடக்கிய வீரம்செறிந்த இனம், இன்று தொடர்ந்து அழிக்கப்படும் நிலையில் தள்ளப்பட்டது நல்லதன்று. அழிந்து வரும் நம் தமிழ்மரபுகளைக் காத்து அடுத்த தலைமுறைக்குத் தரவேண்டிய தருணம் வந்துவிட்டது. உலகத் தாய்மொழிநாளில் தமிழ்மரபுகளைக் காக்கும் சபதத்தை மேற்கொள்வோம். தமிழ் எல்லாவற்றின் தடையகற்றும் அடையாளம்.
.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்