அகில இந்திய வானொலி, திருநெல்வேலி தமிழ்ப் புத்தாண்டுக் கவியரங்கம்



         அகில இந்திய வானொலி, திருநெல்வேலி
               தமிழ்ப் புத்தாண்டுக் கவியரங்கம்
கவியரங்கம் அதுவும் கவிஞர் கலாப்ரியா தலைமையில் கடையநல்லூர் மனோ கல்லூரியில் கவியரங்கம் என்றதும் பெருமகிழ்ச்சி. திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிகழ்ச்சித் தலைவர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், அறிவிப்பாளர் திருமதி உமா கனகராஜ் , கடையநல்லூர் மனோ கல்லூரி முதல்வர் முனைவர் வேலம்மாள் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில் தமிழ்ப் புத்தாண்டுக் கவியரங்கம் 7.4.2018 அன்று கடையநல்லூரில் நடைபெற்றது.நிகழ்ச்சி சித்திரைத் திருநாளில் ஒலிபரப்பாகிறது.
                   நெகிழி இல்லா நகரம்
பேராசிரியர் ச.மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி
புவியரங்கின் கலைப் பிரியனே கவியரங்கின் தலைக்கவிஞனே
செவியரங்கு நிறைக்கக் கவிப்பொங்கல் படைக்கவந்த செந்தமிழ்ப் பாவலனே
தமிழ்போல் நீ வாழ வேண்டுமென வாழ்த்திச்
சிரம்தாழ்த்தி கரம்கூப்பி வணங்கி என் கவி தொடக்கம்.

காட்டாறு பெருக்கெடுக்கும் முல்லைத் திணையிலே
நம் செவியாறு குளிர வைத்து
பாட்டாறு குறளாறு சொல்லாறு
தினம் பொழியவைக்கும் நம் நெல்லை வானொலியின் நிகழ்ச்சித் தலைவர் சுந்தரத் தமிழர் ஆவுடையப்பன் அவர்களுக்கு அடுத்த வணக்கம்.
சிலர் உச்சரித்தால் மொழிமீது உளி விழும்
சிலர் உச்சரித்தால் மொழிமீது பழி விழும்
சிலர் உச்சரித்தால் மொழிமீது மலர் விழும்
நெல்லை வானொலியின்
அறிவிப்பாளர் உமா கனகராஜ் அவர்களுக்கு தமிழ் வணக்கம்.
செவியாலே பார்க்கிறீர்கள்
கண்ணாலே தன்னாலே கவியரங்கைக் கேட்கிறீர்கள்
நேயர் நெஞ்சங்களே
சொல்லாண்டு வாழ்க நீவீர் பல்லாண்டு வாழ்கவென
இனிய வாழ்த்தும் வணக்கமும்.

 இத்தரை மீது நித்திரை கொள்ளும்
மாந்தரை எழுப்பிக் கனியும் களிப்பும்
இனிப்பும் சுவையும் தந்து
புத்தாண்டு வந்ததெனப்
புதுநாட்கள் புலர்ந்ததென
நற்சொல் விளம்பி வந்து
நற்றமிழால் நம்மை இணைக்கும்
விளம்பியாண்டில் விளம்புகிறோம்
கவிதைப் பொங்கல்
நேயர்களுக்கு நெகிழி மறுத்து..

வேனலிலே கட்டி வரும்
 கவிப் பிரியனே!
 உன் பேனாவுக்குள் பெருக்கெடுக்கும் பெருங்கடலால்
 உனக்கோ கவிதை கொட்டி வரும்
 என் நகரம் எனும் தலைப்பெடுத்தால்
மட்டில்லா மகிழ்ச்சி உனக்கு முட்டி வரும்.
யாரும் நடக்கும் போது
நீ குறுக்கே இடைகாலை வைத்துத் தடுத்ததில்லை
அதனால்தான் இடைகாலில் இருக்கிறாய்
இளங்கம்பனாய் இன்னும்
தமிழ்த் தேன் பட்டும் தலைநரைக்காமல்

என் நகரம் என எழுத
மலைக்க வைக்கும் உவமை வரும்
கானலிலே காட்சி வரும்
கண்டபின்னே மீட்சி வரும்.
என் நகரம் பூநகரம்
 தமிழ்ப் பாக்கள் பயிலும் பா நகரம்
அல்வா நகரம் 
மெல்வாய் இனிக்கும் சுவை நகரம்
அருவி கொட்டும் நகரம்
தென்றல் முட்டும் நகரம்
மூங்கில் நுனி இலையில்
பனி உறங்கும் தனி நகரம்
ஆனால் இன்றோ நெகிழிக்கு
நெருக்கமான நெடு நகரம்

என் சுவாசப்பைகள் சுருங்கிவிட்டன
நெடுநாட்களாய் மட்காமல் மண்ணைத் திண்ணும்
நெகிழிப் பைகளைப்போல்.
என் மூச்சு  நெகிழி மூச்சாய் மாறி நெடுநாட்கள் ஆகிவிட்டன.

என்ன ஆயிற்று என் அன்னை நகரமே?
உன்னைப் பாலித்தீனுக்குள்
பாடம் செய்துகொண்டிருகிறதே இந்த நெகிழிப் பேய்

நவீன அறிவியல் செய்த தவறின் தழும்பு நெகிழி
மட்கத் தெரியா மக்குச் சருகு  நெகிழி
மானுட இனத்தின் மலர்வளையம் நெகிழி
பூமிப் பந்தின் பாலீதீன் கிழிசல் நெகிழி
அழிக்கமுடியாத அழுத்த அழிவின்  கண்ணீர்க் கல்வெட்டு நெகிழி.
செரிமானமில்லாப் பூமியின் களங்கக் கிழிசல்கள் நெகிழி

பல்துலக்கும் குச்சியில் தொடங்கி
படுத்துறங்கும் பாய் வரை யாவும் நெகிழி
சாம்பார் வாங்க நெகிழிப் பை,
 பால்கொணர நெகிழிப் பை
தாம்பூலம் பொதிய நெகிழிப் பை
எண்ணை வாங்க நெகிழிப்பை
 எல்லாம் நெகிழி என ஆச்சு
நெகிழியால் என் அன்னை நகரம்
 நரகமாய் கெட்டுப் போச்சு.

ஆம்! நெகிழிக்கு நெருக்கமாய் ஆனோம்
அகழிக்குள் அடக்கமாகிப் போனோம்
நீருக்குக் காத்திருக்கும் சவமாய்
போருக்குக் காத்திருக்கிறது நெகிழி நம்மோடு.
ஆம்! என் சுவாசப்பைகள் சுருங்கிவிட்டன
நெடுநாட்களாய் மட்காமல் மண்ணைத் திண்ணும்
நெகிழிப் பைகளைப்போல்.

சிப்பியில் விழுந்த துளி முத்தாகிறது
மண்ணில் விழுந்த இலை உரமாகிறது
பூமியில் விழுந்த நெகிழியோ கசடாகிறது

இடைகால் வர கவியே!
உருகத் துடிக்கிற பனிக் குழம்பைப்
 பருகத் துடிக்கிற குழந்தையாய்
கருகிவடிகிற நெகிழித் துளிகள் நம்மைப் பருகிச் சிரிக்கிறது.


நெகிழி இல்லாத பச்சை நகரத்தை
நினைத்துப் பார்த்து ஏங்குகிறது மனம் தினம் கவியே!

நெல்மணம் வீசி புதுமைப்பித்தனின் நாசியை வருடிய
வெள்ளக் கோயில் பசுமைவயல்கள்
எட்டிப்பார்த்தால் கை கொட்டிச்சிரித்து
பரணிபாடும் குறுக்குத்துறைப் படித்துறைகள்
ஸ்ரீ வைகுண்டத்து மருதமரங்கள்
செய்துங்கநல்லூர் சாஸ்தா கோவில் மகிழமரம்
பொங்கிவழியும் கனடியன் கால்வாய்
ரெயினிஸ் ஐயர் தெரு குட்டியாடுகள்
கருங்குளம் தாமிரபரணியாற்று பரந்தமணல்வெளி
நிரம்பி வழியும் நயினார் குளம்
காடைகள் வந்தமரும் இலந்தகுளம்
வேணுவனம் காக்கும் மூங்கிலடியான்
எல்லாம் மீண்டும் காணத் துடிக்கிறது நெஞ்சம்
இயற்கைக்கா இங்கே வரும் பஞ்சம்?
சொந்த ஊர் மழை அழகு!
தந்தமண் சிகப்பழகு
எந்த ஊர் சென்றாலும் நதியழகு
நெடுநாட்களாய் நீர் கசியும் தைப்பூச மண்டபம்
குளக்கரையில் தலைசிலிர்க்கும் வெள்ளைப்பறவைகள்
நெளியும் மண்புழு நாசி நனைக்கும் மண்வாசம்
குளித்துக் குளிர்ந்த படித்துறைகள்
ஓட்டுச்சாய்பில் உள்நுழையும் சினையாடு
கம்பங்கூழோடு திண்ணையில் அமரும் அம்மாத்தாத்தா
எல்லோரையும் மீண்டும் பார்க்க ஆசை
அந்த நகரத்தில் தயவுசெய்து நெகிழியே வெளியே போய்விடு
உருக்கச் சிவக்கும் தங்கமா நெகிழி?
 இல்லை
சுருக்கிக் கெடுக்கும் பங்கமே நெகிழி!
நெகிழி இல்லா நகரம் வேண்டும்
நெருக்கமான நேசம் வேண்டும்
அழிவில்லாத அறிவியல் வேண்டும்
அகழியோடு கோட்டைகள்  வேண்டும்
அருவிகள் கொட்டும் அமுதம் வேண்டும்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்