ஞாயிறு போற்றாதும்
முதுமையின் வெண்முட்களாய்
நரைகூடிக் கிழப்பருவமெய்திய
வெண்மயிர்கள் முகப்பரப்பெங்கும்
தொடு மொழியைத் தவிர வேறெம்மொழியும்
விளங்கவில்லை
காது கேட்காது என்றாகிவிட்டது
ஊன்று கோலின்றி உள்ளுக்குள் கூட நடமாட முடியவில்லை
அளவிழந்த தொள தொளச் சட்டைகள்
ஆங்காங்கே கிழிசல்களுடன் அங்கியாய்..
வலுவற்ற பார்வையுடன் யாவரையும்
வெறித்துப் பார்க்கின்றன பீளை கக்கிய
அவ்வயோதிகத்து
கண்கள்
மனைவியை அழைத்துச் சென்ற
எமனை எதிர்பார்த்து சில பொழுதுகளில்
நிலைக்குத்தி நிற்கின்றன.
மகன் அனுப்பும் மணியார்டர் பணத்திற்காய்
அஞ்சல் காரனுக்காகக்
காத்திருக்கிறது
மூத்த முதிய நெஞ்சம்
முதியோர் இல்லத் திண்ணையில்
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதுகூடத் தெரியாமல்
Comments
Post a Comment