ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் கற்றதும் பெற்றதும்



மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக்காகத் தன்னையே தந்த உயர்ந்த மனிதர் ஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவனர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களையும் ஆயக்குடியில் கேன்சர் நோயாளிகளுக்கான சேவைமையத்தைத் தொடங்கி சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் திருமதி. இராமகிருஷ்ணன் அவர்களையும் அமர்சேவா சங்கத்தின் செயலாளர் திரு. சங்கரராமன் அவர்களையும் சந்தித்தேன். 
 
வாழ்வின் பயனை அவர்கள் சேவையால் அடைந்துகொண்டிருக்கும் பெருமகிழ்ச்சியை அவர்கள் முகத்தில் கண்டேன். வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் உன்னதமானவர்கள், திரு.இராமகிருஷ்ணன் நம்பிக்கையின் வாழ்ந்துகாட்டி. சமூக சேவகர் திரு.பாலம் கல்யாணசுந்தரம் அவர்கள்தான் இராமகிருஷ்ணன் குறித்து எனக்குச் சொன்னவர். 
 
1997 இல் எம்.ஏ மாணவனாய் பயின்றபோது பாலம் பாலம் கல்யாணசுந்தரம் அவர்களின் வாழக்கை வரலாற்றினை எழுதினேன். அவர் விதைத்த விதைதான் சேவைநிறுவனங்களை நோக்கி வாழ்வைத் திருப்பியது.ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது “ குற்றாலத்திலிருந்து பத்துகிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் ஆய்க்குடி, அங்கே இராமகிருஷ்ணன் என்கிற ஒப்பற்ற மனிதர் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்குப் பாதுகாவலராக இருந்துகொண்டிருக்கிறார். 

நான்காமாண்டு பொறியியல் பட்டப்படிப்புப் பயிலும்போது அவர் கடற்படை அதிகாரிக்கான பணிக்கான தேர்வில் கயிறுஏறும்போது கைதவறி கீழேவிழுந்தார். தண்டுவடம் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழே உறுப்புகள் செயல்படா நிலையில் மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 



நிலைகுலைந்துபோன அவருக்கு நம்பிக்கை ஊட்டியவர் டாக்டர் அமர்.அவர் பெயரால் தன் சொந்தகிராமத்தில்  அமர்சேவா சங்கத்தை ஒரு கீற்றுக்கொட்டகையில் 1981 ஆம் ஆண்டில் தொடங்கினார். இன்று 32 ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள அமர்சேவா சங்கவளாகத்தில் இன்று ஆரம்பப்பள்ளியும் நடுநிலைப்பள்ளியும் செயல்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி மையமும் சிறப்பாகச் செயல்படுகிறது. ஆசியாவிலேயே சிறப்பான முதுகுத்தண்டுவடச் சிகிச்சை மையம் இங்குச் செயல்படுகிறது. அவரோடு சேர்ந்து கழுத்துக்குக்கீழ் செயல்படாத எஸ்.சங்கரராமன் இணைந்து  மாற்றுத்திறனாளிகளுக்காக உழைத்து வருகிறார்கள். 

800 சேவைக் குழுக்களின் மூலம் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவை செய்துவருகிறார்.  ஆய்க்குடி அமர்சேவா சங்கத்திலிருந்து வந்த அழைப்பை அன்புடன் ஏற்று 13.6.2016 அன்று நடைபெற்ற ஆளுமைப்பயிற்சி முகாமில் உரையாற்றச் சென்றேன். சேவை செய்யும் தன்னார்வத்தொண்டர்களுக்குக் காலையில் ஓர் அமர்வும் பிற்பகலில்  அங்குப் பணியாற்றுவோருக்கு ஓர் அமர்வுமாக இரு அமர்வுகள் ஆளுமைப்பயிற்சி முகாம் நடத்தினேன்.


 எல்சிடி படங்கள் ஏதும்இல்லாமல் இயல்பாக அவர்களோடு உரையாடியபடி முகாமை நடத்தியது அவர்களுக்குப் பிடித்திருந்தது. உலகின் ஏதோவொரு பகுதியில் யாரோஒருவர் எப்போதும் மற்றவர்களுக்காகவே உழைத்துக் கொண்டேஇருக்கிறார்கள், அவர்களை ஊக்கப்படுத்தத்தான் நாம் தயாராக இல்லை என்பதைப்புரிந்துகொண்டேன்.

வளாகம் முழுக்கச் சக்கரநாற்காலிகள் சுழன்றுகொண்டே இருந்தன.குட்டிக்குழந்தைகள் முதல் வயதான பெரிவர்கள் வரை அனைவரும் மிக உற்சாகமாகப் பம்பரமாகச் சுழன்றுகொண்டே இருந்தனர். குற்றால மலைச் சாரலில் உள்ள அமர்சேவா சங்கத்தில் வெளிநாடுகளைச் சார்ந்த இளையோர் கூட்டமும் நிரம்பிவழிந்தது. கற்றுக்கொடுக்கப் போனவன் நிறைய கற்றுக்கொண்டு திரும்பினேன்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்