தி இந்து தமிழ் நாளிதழில் இளமை புதுமை பகுதியில் என் கட்டுரை http://tamil.thehindu.com/society/lifestyle/article19770190.ece

http://tamil.thehindu.com/society/lifestyle/article19770190.ece

மகா நிதியாய் மனதில் நின்ற மாணவர் தென்பத்து தெ.ஆறுமுகம்

பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர்,






சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை, 9952140275
நினைத்துப்பார்கிற யாவுமே உயிரின் வேரை நனைத்துப் பார்க்கத்தானே செய்யும்! என் அன்பு மாணவன் தென்பத்து தெ.ஆறுமுகம் என்றும் மறக்க இயலாத மகாநதியாக மனதுக்குள் பதினெட்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறான். வெளியே இருக்கும் செய்திகளை மாணவர்களின் உள்ளுக்குள் ஊற்றுவதுமட்டும்தான் கல்வியா? அவர்களின் உள்ளிருக்கும் ஆற்றலை ஏன் வெளிக்கொண்டு வர நாம் ஏன் முயலக்கூடாது என்று எனக்குள் கேட்டுக்கொண்டவானாய் அப்போதுதான் (1998) திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையில் விரிவுரையாளராய் பணிக்குச்சேர்ந்தேன். “சமூகநலன் நாடும் சாதனை மாணவர்களை நீங்கள் நம் கல்லூரியில் உருவாக்கவேண்டும்! ” இதுதான் ஆட்சிக்குழு என் ஆசிரியப் பணியின் முதல்நாளில் சொன்ன சொற்கள்!  ஏறக்குறைய என்னிடம் பயின்ற மாணவர்களைவிட ஐந்துவயது மூத்தவனாய் அப்போது இருந்ததால் மாணவர்கள் அன்போடும் உரிமையோடும் வகுப்பறைகளில் நட்போடு பேசினார்கள். அனைத்து மாணவர்களின் பெயர்களும் தெரிந்து அவர்களோடு உள்ளன்போடு பேசும் ஆசிரியர்களை மாணவர்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.
மாசுமறுவற்ற அன்பு
ஆசிரியர்கள் கொள்ளும் அன்பு மெல்ல மெல்ல அவர்கள் நடத்தும் பாடத்தையும் பிடித்ததாக மாற்றிவிடுகிறது. குருசிஷ்ய உறவின் நுட்பம் மாசுமறுவற்ற அன்புதான். வகுப்பறைகள் எப்போதும் சமூகம் சார்ந்த உரையாடல் களங்களாக இருக்கவேண்டும் என்பதால் அவர்களின் திறன்களைக் கண்டறியும் சமூகத்தின் மீதான அவர்களின் கூரிய பார்வையைக் கண்டறியவும் தினமும் இருமாணவர்களைப் பேசவைப்பது வழக்கம்.  அது முதலாமாண்டு வரலாறு வகுப்பு! முந்தைய நாள் வகுப்பு முடியும்நேரம் “என் வேர்” என்கிற தலைப்பில் “ஆறுமுகம் நாளை நீ பேசவேண்டும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன்.
 கிராமத்துப் பள்ளியில் பயின்ற ஆறுமுகத்தின் கூச்சத்தையும் தயக்கத்தையும் ஒருவாரமாய் கவனித்து அவனைப் பேசச் சொன்னேன். அன்று மதியம் துறைக்கு வந்தான்.. “அய்யா நான் கிராமத்து மாணவன் எனக்கு யார் முன்னும் பேசிப் பழக்கமில்லை, இயல்பாக ஊரில் நாங்கள் பேசும்  முறையில் நான் பேசினால் எல்லோரும் சிரிப்பார்கள்” என்றான். “ பரவாயில்லை சிரிக்கட்டும் ஆனால் நாளை எல்லோர் முன்னும் நீ பேசியே ஆகவேண்டும்” என்றேன்.
 பேசவைத்த பேச்சு
மறுநாள் தமிழ் வகுப்பறையில் தன் வேராய் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கும் தன் கிராமமான தென்பத்து குறித்து அழகான நெல்லை வட்டாரச் சொற்களோடு மிகஇயல்பாய் வர்ணித்தான். எங்க வாழ்க்கையும் எங்க மண்ணும் ஈரம் வாய்ந்தது எனத் தொடங்கினான்..ஊரின் அருகில் குறுக்குத்துறைத் தாமிரபரணிக் குளியல், சொக்கட்டான் தோப்பு இளவட்டக்கல், அவன் பராமரிக்கும் மாடுகள், அது கன்று ஈனிய நாளை காலண்டர் அட்டையில் குறித்து வைத்து அதன் பிறந்தநாள் கொண்டாடும் பழக்கம், மண்புழு உரம் தயாரிப்பதற்கும் மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிக்க தன் கிராமத்தார்களுக்குத் தான் வழங்கும் பயிற்சி, கரகம், காவடி, கும்மி, பறை, காளி நடனத்தில் தனக்குள்ள பயிற்சி என்று அவன் தன்னை மறந்து என் வேர் இதுதான் என்று அவன் பேசியதை முதலாமாண்டு வரலாறு ஆங்கில இலக்கிய மாணவர்கள் இமைக்காமல் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
ஊற்றுக் கண்ணைத் திறப்போம்
இளநீர் சீவும் அரிவாள் அதன் ஊற்றுக் கண்ணை உடைக்குமே! அப்போது முன் நிற்போர் முகத்தில் பீய்ச்சியடிக்குமே! அதுமாதிரி அவன் உரை இருந்தது. ஆயிரம் தயக்கங்களோடு எதிரே இருக்கும் பலநூறு மாணவர்களின் திறமையின்  ஊற்றுக் கண்ணை உடைக்கிற கூர்உளி ஆசிரியரின் சுட்டுவிரல். அதன்பின் அவனை இளைஞர்நலத்துறை மற்றும் கவின்கலை மன்றத்தின் மாணவப் பொறுப்பாளராகப் பொறுப்பு தந்து ஊக்கப்படுத்தினோம்.
 திறன்வெளிப்பாடு
நெல்லை மருத்துக்கல்லூரி நடத்திய பீமர்-99 மாணவர் கலைவிழாவுக்கு அழைத்துச் சென்றோம். குற்றாலக் குறவஞ்சிக் குறத்தியாய் பெண்வேடமிட்டு ஆறுமுகம் மேடை ஏறினான். நடுவர்களுக்கே கைரேகை பார்த்து ஜோசியம் சொன்னான், அரங்கம் அதிர மாறுவேடப் போட்டியில் முதலிடம் பெற்றான். அடுத்தநாள் அவன் பெற்ற பரிசைக் கல்லூரித் தாளாளர் அவர்களிடம் காட்ட அந்த மாணவனை நம் கல்லூரியில் மேடையில் அதே நிகழ்வை அரங்கேற்ற வையுங்கள் அவனுக்கு நாம் கல்லூரி சார்பில் பரிசு தருவோம் என்றார்கள். கல்லூரி ஆண்டுவிழாவில் அப்போதைய நெல்லை ஆட்சியர் சுனில்பாலிவால் ஆறுமுகத்திற்குப் பரிசு வழங்கி “மண்ணின் மைந்தன் ஆறுமுகம் நம் இளைய நம்பிக்கை என்று பாராட்டினார். சேவியர் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுமையத்திற்கு  அவனை அழைத்துச் சென்று நாட்டார் வழக்காற்றியல் பட்டய வகுப்பில் சேரச்செய்து நிகழ்த்து கலைகளை முறைப்படிக் கற்றுக்கொள்ளச் செய்தோம். அதன்பின் நாடகம், நாட்டுப்புறப்பாடல், நாட்டார் கலைகள் என்று தன் கலைச் சிறகுகளை விரித்து திருப்பதி, கொச்சின், சிக்கிம் தேசியஅளவிலான போட்டிகளில் தேசியவிருதுகளைத் தட்டிவந்தான்.
சமூக விழிப்புணர்வு
சுற்றிச் சுழன்று ஆடி ஹார்லிக்ஸ் பாட்டில் மீது ஒற்றைக் காலைப் பதித்தபடி தலையில் உள்ள கரகம் கீழே விழாமல் அவன் நிற்கும் அழகு சொல்லி மாளாதது. தன் பகுதி கிராமத்து இளைஞர்களைக் கொண்டு கலைக்குழுவை உருவாக்கி மாலை நேரங்களில் இரத்ததானம், தாமிரபரணி ஆறு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று வரிசையாய் விழிப்புணர்வுக் குறுநாடகங்களைத் தானே எழுதி நடிக்கத் தொடங்கினான். நாளொரு கலையும் பொழுதொரு நிகழ்ச்சிகளாக அவன் கல்லூரி நாட்கள் பொருள்பொதிந்த நந்தவன நாட்களாய் நகர்ந்தன. அரும்புகள் தொண்டு நிறுவனத்தில் இணைந்து மன்னார்வளைகுடா கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக 200 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களுக்குச் சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தினான். ஒருநாள் வகுப்பறையில் நெல்லையில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளியின் நிலைகுறித்து வருத்தத்துடன் பேசினான்.
திருப்பம் தந்த திறமைத் திருவிழா
அதற்கு மறுநாள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திறமைத்திருவிழாவை இளைஞர் நலத்துறை சார்பில் அறிவித்தது. மாணவர்களைத் தங்களைச் சுற்றி நடக்கும் சமூக நிகழ்வுகளை எவ்வாறு கண்டுகொள்கிறார்கள் என்பதைக் கண்டறிய களஆய்வு செய்து அறிக்கை தரும்படி அறிவித்தது. நேற்று வகுப்பில் நான் பேசியபோது குறிபிட்ட பாடகசாலை என்கிற கிராமத்தில் உள்ள பாடசாலை பாடாவதியாய் உள்ளது அய்யா.. சகமாணவர்களோடு இணைந்து களஆய்வு செய்து நான் அதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தரவா என்றான். கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்று அனுப்பிவைத்தோம்.
பாடக சாலையில் உள்ள பாடசாலை நிலை
ஒருவாரம் கழித்து வகுப்புக்கு ஒரு கண்ணாடி பாட்டிலோடு வந்தான், மாணவர்கள் ஆர்வத்தோடு அவன் என்ன சொல்லப் போகிறான் என்று கவனிக்க “ கீழே விழப் போகும் மண்சுவர், கூரை வழியே உள்நுழையும் மழைத் தாரை, இரவு நேரம் மாட்டுத் தொழுவமாகும் பள்ளிக் கூடம், தவறாது வகுப்புக்கு வரும் பாம்புகள், தேள்கள்..இதோ அந்தப் பள்ளியில் நேற்று நாங்கள் பிடித்த பாம்பு” என்று வகுப்பில் சொல்ல அனைவரும் அரண்டுபோனாம். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாணவர் தென்பத்து ஆறுமுகம் அந்த அறிக்கையைத் தான் பிடித்த பாம்போடும் தேளோடும் விளக்கிப்பேச அடுத்தநாள் நெல்லை நாளிதழ்களில் ஆறுமுகத்தின் ஆய்வறிக்கை முழுப்பக்கச் செய்தியானது, தொலைக்காட்சி ஊடகங்களின் கேமராப் பார்வைக்குள் அந்த இடிந்த மண்சுவர்ப் பள்ளி பதிவானது, செய்திகளின் மூலம் முதலமைச்சர் பார்வைக்குப் போனது. பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் அந்தப் பள்ளியைப் பார்வையிட்டார்கள். உடனே கட்டட நிதி ஒதுக்கப்பட்டது. திருநெல்வேலி நகரத்திற்கு அருகே உள்ள பாடக சாலை கிராமத்தில் பாடாவதியாய் கிடந்த பாடசாலை மாணவர் தெ.ஆறுமுகத்தின் இருபதுபக்க ஆய்வறிக்கையால் புத்துயிர் பெற்றது. அடுத்த ஆண்டில் அழகான பள்ளிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட செய்தியை ஆறுமுகம் சொன்னான். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, படாகசாலை என்று எழுதப்பட்ட கம்பீரமான மாணவப் பள்ளியாகவே என் மாண்புமிகு மாணவன் தென்பத்து ஆறுமுகம் எனக்குத் தெரிந்தான். “ இப்போது முடியாதென்றால் எப்போது முடியும் எங்களால் முடியாதென்றால் யாரால் முடியும்?” என்பதைக் கேட்பதுபோல் ஆறுமுகம் அந்தப் பள்ளிமுன் நின்றுகொண்டிருந்தான், ஆம்! பள்ளியாகவே நின்றுகொண்டிருந்தான்.




Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்