வதுவை மொய்கள் :முனைவர் ச.மகாதேவன் கவிதை
நூறு ரூபாய் பரிசுப்பொருட்கள்
வந்த பின்பு
நோட்டோடு மொய் எழுதுகிற
பொறுப்பான பெரியவர்கள்
அவசியமற்றுப்
போய்விட்டார்கள்...
பிரம்மம் பிரசாபத்தியம் ஆரிடம்
ராக்கதம்
பைசாசம் கந்தர்வம்
என்று எண் வகையாய் ஏற்றம் பெற்ற
மன்றல் விழாக்கள் இன்று
வாழ்த்துச் செய்தியை அச்சிட்ட
ஐம்பது பைசா மொய்க் கவரோடு
முற்றுப் பெறுவது அவ்வளவு
சரியாயில்லை.
தூர எறிகிற கண்ணாடிக் குவளைகள்...
ஓடாத கடிகாரங்கள், பீங்கான்
குவளைகள்
என்று மணவீட்டில்
பரிசளிப்பதற்காகவே
நூறு ரூபாய்க்குள் செய்து
தரப்படுகின்றன
இந்தப் பரிசுப்பொருட்கள்....
ஒளிப் பதிவிற்காகக்
குழுப்புகைப்படத்திற்காக
வண்ணக் காகிதங்களால்
புனையப்பட்ட பயனற்ற பரிசுகள்
ஒவ்வொரு மணவீடுகளிலும்
பாவம் அவற்றை வைத்து
அவர்கள் என்ன செய்வார்கள்?
வேறொரு புதுவண்ணக் காகிதம் சுற்றி
இன்னொரு திருமணத்திற்குத் தருவதைத்தவிர!
Comments
Post a Comment