திருநெல்வேலி சௌந்தர மகாதேவன் புதுக்கவிதைகள் Dr.S.Mahadevan,Head of the Department of Tamil,Sadakathullah Appa College



ஒரு ரூபாய் கோழிக்குஞ்சு

பாளையங்கோட்டை
சேவியர் பள்ளி வாசலில்
ஆறாப்பு முழு ஆண்டுத் தேர்வு
முடித்த மகிழ்ச்சியில் நின்றிருந்தபோது
அட்டை அரணில்
கீச்... கீச்... சத்தத்தோடு ஒன்றன்மீது ஒன்றாய்
அங்குமிங்கும் அலைந்த
கலர் கோழிக் குஞ்சுகள்
கண்ணை ஈர்த்தன.

பாக்கெட்டிலிருந்த ஒரு ரூபாய்க்குப்
பச்சை நிறக் கோழிக் குஞ்சு கிடைத்தது
வீட்டிற்குக் கொணர்ந்து
தலையில் வைத்து ஆடி மகிழ்ந்து
உண்ணக் குருணை தந்து
உறங்கிப் போனேன்

விடியும் போது
விரைந்து கிடந்தது
அந்த வண்ணக் கோழிக்குஞ்சு
உணர்ந்த முதல் நாளும் அதுவே.

காய்கறிச் சந்தைக்குப் போகும்வழியில்
கம்பிக் கூண்டுகளில் வைத்துக்
கோழிக் கடைகளில் இறக்கப்படும்
பிராய்லர் கோழிகளைப்
பார்க்கும் போதெல்லாம்
பரிதாபமாகச் செத்த அந்தப்
பச்சை நிறக் கோழிக் குஞ்சின்
விரைத்த உடலே
நினைவுக்கு வந்து நெஞ்சை அழுத்துகிறது


பழங்களும் நாங்களும்...

விரைவாக அழுகிவிடக் கூடாதென
மெழுகிடப்பட்ட ஆஸ்திரேலிய
ஆப்பிள்களைப் போல
மனிதர்களின் தோல்களுக்கும்
நாளை மருந்திடப்படலாம்

பார்த்தவுடன் பரவசத்தை ஏற்படுத்தும்
ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட
வாஷிங்டன் ஆரஞ்சுகளைப்போல நாளை
மனிதர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு
நெற்றியில் இரகசியக் குறியீடுகளுடன்
அடையாள ஸ்டிக்கர்கள் ஒட்டப்படலாம்.

விதையில்லாத் திராட்சைகளைப் போல
மனிதர்களை மாற்ற
விபரீத விஞ்ஞானம் முயலலாம்.

அழுகிய பழங்களை
அள்ளிப் போட்டு அரைத்துப்
பழக் கூழ் தயாரிக்கிறமாதிரி
மனிதர்களை அரைத்து
எலும்புக் கட்டடங்கள்
எழுப்பப்படலாம்.

என்ன செய்தாலென்ன?
எவர் எதிர்த்துக்
கேட்கப் போகிறார்கள்?

சுமை தாங்கி வரலாறுகள்

பொன்னமராவதி
பட்டமரத்தான் கோவிலுக்கருகேயிருக்கும்
அமரகண்டான் ஊருணிக்கரையில்
என் தாத்தா வைத்த
சுமைதாங்கிக் கல் இன்னுமிருக்கிறது
அந்தக் கல்லை நட்டபின்தான்
அம்மா பிறந்தாளாம்...
அப்போதிருந்து அந்தக் கல்லைப்
பார்க்கும் போதெல்லாம்
அம்மா குழந்தையாயிருப்பது போலக்
காட்சிகள் வரும்.

பத்து மாதக் கருவுடன்
பாப்புலர் திரையரங்கிற்குப் படம் பார்க்கப்போன
தென் பொத்தை வெள்ளையம்மா அக்கா
துள்ளத்துடிக்க இறந்து போனபோது
அவளதுமடிப் பாரம் இறக்க
ஊர் எல்லையில் மக்கள் வைத்த
சுமைதாங்கிக் கல் இன்னுமிருக்கிறது

இப்போது ஏதேனும் ஒரு
சுமைதாங்கிக் கல்லைப் பார்த்தால் கூடக்
கற்களுக்குப் பதில்
அம்மாக்களும்
வெள்ளையம்மாக்களும்
தெரிகிறார்கள்
அவை...
வாழ்ந்து முடிந்தவர்களின்
வரலாறுகள்.

அஞ்சல் அடையாளம்...

கடிதங்களற்ற வாழ்க்கை
கழுத்தை இழந்த முண்டங்களாவே
எனக்குத் தெரிகிறது.

அஞ்சலட்டைகளில் இலக்கியம் படைத்துவரும்
தி.க.சி. யைப் போல
அச்சடித்தது போல்
ஆயிரமாயிரம் கடிதங்கள் எழுதிய
வல்லி்க் கண்ணனைப் போலப்
புதுச்சேரியிலிருந்து கிண்டலாய் எழுதும்
கி.ரா. போல் கடித இலக்கியங்கள் படைக்க
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை...
உண்மை! இது வெறும் புகழ்ச்சியில்லை

கருமை மை பூசப்பட்ட
கருமாதிக் கடிதங்களின்
மரண அடர்த்தியை
எந்த மின்னஞ்சல் செய்து
தந்து விடும்?

“வாகா எல்லையிலிருந்து
மிலிட்டரிக்கார மருதையா
தன் மனைவிக்கு ஆசையாய் ரகசியமாய்
எழுதிய இன்லண்ட் கடிதங்கள்
இன்னொரு இன்பத்துப் பாலாயிற்றே!

அடிப்பூர அழைப்பிதழோடு
அம்பாளின் குங்குமப் பிரசாதத்துடன்
திருவில்லிபுத்தூரிலிருந்து வந்த
ஐந்து ரூபாய் கவர் தந்த நிம்மதி கொஞ்சமா?

ஒரு மணியாகி விட்டால்
தபால்கார செல்வராஜ் அண்ணாச்சியைக்
கண்கள் தேடுகின்றன
கடிதம் ஏதும் எனக்கு வராததால்
தலைகவிழ்ந்தபடி
சைக்கிளை உருட்டிக் கொண்டு
அடுத்த வீட்டுக்கு
அவசரமாய் அவர் நகர்கிறார்.

திணரும் வேலி

வழிப்போக்கர்கள் வந்தமரும்
திருநெல்வேலி வளவுவீட்டுத் திண்ணைகள்
இடிக்கப்படுகின்றன
வாகனம் நிறுத்த வசதியில்லையாம்.

திருச்செந்தூர் நடைப்பயணம்
மேற்கொள்பவர்களுக்கு அள்ளியள்ளி
அன்னமிட்ட விஜயராகவ முதலியார் சத்திரத்தில்
சிமெண்ட் மூட்டைகள்
விற்பனையாகின்றன.


வண்ணார்பேட்டை
ஞானமணியம்மாள் சத்திரம்
வாகனப் பழுது நீக்கமாக மாறி ஒரு யுகம்
கழிந்துவிட்டது.

மங்கம்மா சாலைகளில்
மாடிவீடுகள் கிளம்பி விட்டன

புதுமைப்பித்தனின்
காலனும் மருதாயிக் கிழவியும்
உலவிய
பேயடிப்பதாய் மக்கள் பயப்படும்
வெள்ளைக்கோயில்
சுடுகாட்டுக்கருகே சென்ட் இரண்டு
லட்சத்திற்கும் இடமில்லை.

சாலையோரத்து மருத மரங்களை
மின்சார ரம்பத்தால்
மொட்டையடித்தாயிற்று..

தாமிரபரணியை உறிஞ்சித்
தனியார் பாட்டியலில்
விற்றாகி விட்டது;

சுலோசன முதலியார் பாலத்தைத்
தொலைபேசி வட இணைப்பிற்காக
நூறுமுறை உடைத்தாகிவிட்டது;
மிச்சமிருப்பது
அல்வா மட்டும்தான்!
அதையும் கொடுத்துவிடலாமே!

சாப்பாடு

திருப்பிப் போடப்பட்டுச்
சுடப்படும்
தோசை போல்
வாழ்க்கை
திரும்பத்திரும்பச் சுடுகிறது
சாவு சாப்பிடும் வரை


அணிலாடு முன்றில்

மலையான் ஊரணிக்கருகேயிருக்கும்
நாகி ஆச்சி வீட்டு முற்றத்தில்
கொய்யா மரமுண்டு...
அதில் கொய்யா
கொய்யாக் கனியுண்டு

கல்முகப்பிலமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வழுவழுப்பான மரத்திலிருந்து
அங்குமிங்கும் பார்த்தபடி
அணில் அந்த முற்றத்தில் இறங்குகிறது

பட்டுக் குஞ்சலத்தையொத்த அழகு வால்
முன்னிரு கரங்கள் ஏந்தி
முன்னிருக்கும்
பழத்தைக் கொறிக்கிறது
அவ்வப்போது
அங்குமிங்கும் மிரட்சிப் பார்வை வீசுகிறது

தடவிக் கொடுப்பதற்கு
இராமர்களுக்குப் பஞ்சமோ என்னவோ
நம் பக்கத்தில் வரவே பயப்படுகிறது

ஆச்சியின் அழைப்பிற்குத் திரும்பினேன்
பூனையின் வாயில்
அணில் மாட்டித் துடித்தது.

அதன்பின்பு
அணிலாடா அந்த
முன்றிலுக்குப் போக
மனமில்லை.

சௌந்தரமகாதேவன்
திருநெல்வேலி




தன் வரலாறு

ஆறு தன் வரலாறு கூறுவதாக
ஆறாம் வகுப்பில்
கட்டுரை எழுதியதோடு சரி
அதன் பிறகு
எந்த வரலாற்றையும்
நான் எழுதவில்லை.

அவரவர் வாழ்க்கையை
அவரவர் வார்த்தைகளில்
சொல்லுங்கள் என்பார்
வண்ணதாசன்

நான் சொல்லத் தொடங்கியுள்ளேன்
இலக்கியமா?
இல்லையா?
என்ற தர்க்க
வினாக்கள் ஏதுமற்று.

தாழ்பாளற்ற நாட்கள்

விடியும் போதே வெறுப்பாயிருந்தது
மின்சாரமற்ற மின்விசிறி மேலே...
வியர்வையால்
பொது பொதுத்தத் தலையணை கீழே..

என்றைக்கும் இருக்கிற நாளாய்
இன்றைக்கும் இருக்கத்தான் வேண்டுமா?

புத்திசாலித் தனங்களைப்
புறந்தள்ளிய புதிய நாளை...
தொழுத கைக்குள்ளும் மறைந்திருக்கிற
குறுவாள்களைத் துப்பறிந்து தரும்
கண்களற்ற இனிய நாளை
வாகனங்களை முந்தி
தலை தெறிக்க அலுவலகம் ஓடாத ஓய்வு நாளை
டையது கட்டிப் பொய்யது பேசி
மெய்யதைத் தொலைக்காத தூய நாளை நோக்கிச்
சிறகுகள் பூட்டிய வண்ணத்துப் பூச்சி மாதிரிச்
சிந்திக்காமல் பறந்தேன்...
அறிவு இருப்பதையே மறந்தேன்...
இன்று ஒரு வேளை
என்னை எந்திரமாக்காத
ஞாயிற்றுக்கிழமையாக இருக்கலாம்..
இன்று, தாழ்பாள்கள் ஏதுமற்றுத்
திறந்து கிடக்கிறது
என் நந்தவன நாள்.

சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

அஞ்சலிச் சுவரொட்டிகள்...

சமீபகாலமாய்
சுக துக்கங்கள் யாவற்றையும்
சுவரொட்டிகளின் வழியே
சொல்லத் தொடங்கி விட்டோம்...
இரட்டைக் கண்களில்
கண்ணீர்த் துளிகள்
வழியும் புள்ளியில்
கறுப்பு மலர்களின் பின்னணியில்
சுவரொட்டிகளில் அவ்வப்போது
கண்ணீர் அஞ்சலிகள்

மழையில் நனைந்து
வெயிலில் வெளுத்து
ஆறு மாதங்களுக்கு முந்தைய
அஞ்சலிச் சுவரொட்டிகளையும்
அவ்வப்போது காண்கிறேன்

அதுசரி...
என் கண்ணீரையும்
என் அஞ்சலியையும்
ஊருக்கு நான் ஏன்
பிரகடனப்படுத்த வேண்டும்?


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்