சொற் சோப்புகள்
எந்நேரமும் எவருடனாவது பேசிக் கொண்டேயிருக்கும்
பண்பலை அறிவாப்பாளர்களைப் போல்
எங்காவது யாரேனும் எதையாவது
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
குரலை உயர்த்தி உணர்ச்சியால்
தழுதழுப்பதும், அடுக்கு மொழிகளை அடுக்கி
மேற்கோள்களைச் சொல்லி வேகமாய் பேசுவதும்
பக்கத்து நாடுகளின் பெயர்களை எல்லாம் சொல்லிச்
சுட்டு விரல் நீட்டிப் பேசுவதும்
சவகர் திடலில் பார்த்துச் சலித்துப்போய் விட்டது.
பாராட்டு விழாக்களென்றால்
சொல்லவே வேண்டாம்
சொற்களை சோரம் போகச் செய்து
மொழியை முடமாக்குகிறார்கள்.
அவர் பிறந்த நூற்றாண்டில் நாம் பிறந்தது
’பாக்கியம் எனச் சொல்லி’ கைதட்டு வாங்குகிறார்கள்
அவர்கள் பேசிவிட்டுச் சென்ற பின்
அந்த மேடையில்
அதன் குழந்தைகள் விளையாடுகின்றன
எந்த ஒப்பனையும் இன்றி
நைக்கப்பட்டு நசுக்கப்பட்ட மொழி
கதவில் சிக்கி வாலை இழந்த
பல்லியைப் போல
இரணத்தோடு
மெல்ல
மெல்ல
மேடையை விட்டு
அப்பால் போகிறது…
அவர்கள் போட்ட
சோப்பு வெள்ளத்தில்
வழுக்கி விழாமல் நாமும்
கவனமாய் வெளியேற வேண்டியிருக்கிறது.
Comments
Post a Comment