பாட்டியிடம் படித்தவை



பாட்டி தாத்தாவைவிடப்
பண்பாட்டைக் கற்றுத்தர
யாரால் முடியும்?
 பரிட்சைக்குப் பத்துநாள் முன்பு ஹால் டிக்கெட்
தொலைந்து விட்டதெனக் கதறியபோது
பட்ட மரத்தானுக்குச் சாம்பிராணி போடு
பத்து நிமிடத்தில் கிடைக்குமென்று நம்பிக்கை சொன்னாள் பாட்டி
சொன்னபடிக் கிடைத்தது.

நள்ளிரவு விலுக்கென்று எழுந்து பதறியழும்
தம்பிப் பாப்பாவின் பயம் போக்கப்
பிடாரி கோவில் தேரடியில்
தேங்காய் வாங்கிச் சிதறுகாய் விடச் சொல்வாள்

வாசலில் பிச்சைக்காரன் வந்தால்
என் கையில் கொடுத்துப் போடச் சொல்லி
அறத்தை அடிமனதில் பதிப்பாள்


சனிக்கிழமை சந்தைக்கு அழைத்துச்சென்று
நுங்கு வாங்கித் தந்து
பங்கு போட்டுச்சாப்பிடு என்று
பகிர்தலைப் பதித்தாள்

ஆதிகாலத்து அலங்கார மாளிகைக்கு
அழைத்துச் சென்று டிராயர் சட்டை வாங்கித் தந்து
முத்தம் கொஞ்சி
அன்பைப் பதி்த்தாள்

அமரகண்டான் ஊருணிக் கரையிலுள்ள
வாசக சாலைக்கு அழைத்துச் சென்று
அம்புலிமாமாவிலிருந்து எழுத்து வாசிப்பை ஆரம்பித்து வைத்தாள்.
படிப்பைப் பதித்தாள்.

குடிசை வீடு, மண்தரை,
அரிக்கேன் விளக்கு மட்டுமே உண்டு அவள்
சிதம்பரம் செட்டியார் தெரு வீட்டில்
ஆனாலும்
பல்கலைக்கழகங்களில் படித்ததை விடப்
பாட்டியிடம் படித்தது அதிகம்.

இவன் இழந்தது

பசலிப் பழங்களை நகங்களுக்கிடையே
நசுக்கி நகச்சாயம் போட்டதுண்டு.

பூவரசம் பூவின் அழகைக் கண்டு
பூவரச இலையைச் சுற்றி
இளையராசாவாய் இசையெழுப்பியதுண்டு

எலியின் வாலில் கயிறுகட்டி

அது போன திசையெலாம் கூடப்
போனதுண்டு

பாவம் செய்ததாய் ஓணானைப் பிடித்து
மூக்குப் பொடி காரப்பொடி போட்டு
சித்திரவதை செய்து கொன்றதுண்டு.

கவுட்டா புள்ளோடு காகக்குஞ்சைஅடித்துக்
கவர்ந்து வந்ததுண்டு

சிகரெட் அட்டைகளைப் பொறுக்கக்
கடைகடையாய் அலைந்ததுண்டு.

வாடகை சைக்கிள் எடுத்து
விடுமுறை நாளில் ஓட்டி
இருகரம் தூக்கிச் சாகம்
செய்ததுண்டு.

கோலிக்காய் ஜெயித்துப்
பானை நிறையச் சேர்த்ததுண்டு

தோற்றவன் பம்பரத்தை ஆக்கர்
வைக்கக் கூரான ஆணி தேடி அலைந்ததுண்டு

இதில் ஒன்று கூடச்செய்யாமல்
இன்று என் மகன் மவுனமாய்
கணினியில் கார்ப் பந்தயம் பார்த்துக்கொண்டிருக்கிறான்
என்ன செய்ய?

                  முனைவர். ச. மகாதேவன்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்