பறிபோன பால் ஐஸ்கள்




முழுப்பரிட்சை விடுமுறை விட்ட நாளிலிருந்தே
தெருவெல்லாம் குழந்தை ஒலிகள்
“ரிங்கா ரிங்கா ரோசாக்களாய்“
ஒரு குடம் தண்ணி எடுத்து
ஒரு பூப் பூத்த மலர்களாய் என் நேசத்திற்குரிய குழந்தைகள்.
கயிறு கட்டி உள்ளுக்குள் ரயில் விடாத
குழந்தைகள் என்ன குழந்தைகள்?

ஜில் ஜில் விலாஸ் ஐஸ் பாக்டரியின்
சதுரப் பெட்டியின் மரக்கட்டை மூடியைச்
சப்தமாய் அடித்தபடி சைக்கிள் மணியோசையோடு
இதோ தெருவுக்குள் வந்து விட்டார் ஐஸ் மணி கிச்சா தாத்தா.

ஒரு ரூபாயோடு உள்ளிருந்து
ஓடுகிறான் என் மகன் பிரணவ்..
பாக்கெட் ஐஸோடு பழத்தை உள்ளேபோட்டுக்
கட்டையால் நைத்துத் தருகிறார்.
துளையிட்டுச் சூப்பி மகிழ்கிறான்
தம்பிக்காக அவன் தம்ளரில்
வாங்கி வைத்த பால் ஐஸ் உருகி
உள்ளுக்குள் குச்சி மட்டுமே.

ஐந்து நட்சத்திர மதிப்போடு
ஐஸ்கிரிமின் பத்து ரூபாய் பந்துகள் வந்தபின்
கிச்சா தாத்தாவோடு பாக்கெட் ஐஸ்களும்
பால் ஐஸ் குச்சிகளும் காணாமல் போனது

தம்பிக்காகத் தம்ளரில் ஏந்தவோ
உள்ளங்கையில் அடக்கி உச்சிவெயிலில்
ஓடவோ இயலாத
தெருக்களானது எங்கள் நெருக்கடி மிகுந்த தெருக்கள்.

                                         முனைவர். ச. மகாதேவன்


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்