கவலை வலை...
மாம்பழங்களுக்குள்ளும்
மகிழ்ச்சியாக
வண்டாட முடிகிறது கருநிறப்
பூச்சிகளால்
பாறைகளுக்குள்ளும்
பத்திரமாக
உயிர் வாழ முடிகிறது
தேரைகளால்
கொங்குதேர் வாழ்க்கை
நடத்தும்
அஞ்சிறைத் தும்பிகள்
பூக்களுக்குள்ளும்
துயில்கொள்ள முடிகிறது
அட்டைப் பெட்டிகளுக்குள்ளும்
குட்டிகளைக் காக்க
முடிகிறது பூனைகளால்
மின்சாரவடங்களிலும்
கவலையற்றுக் கால்பதிக்க
முடிகிறது பறவைகளால்
கண்டங்களைக் கடந்து
விரிவானில் விரைந்து
வரமுடிகிறது
அலகுநீள்
ஆஸ்திரேலியக் கொக்குகளால்
யாவற்றையும் இழந்து
கவலைகளை முகத்தில்
ஒட்டியபடி
அபலைகளாய் அலைய
மட்டுமே நம்மால் முடிகிறது
சொந்த ஊரை
விட்டுச் சோறு கூடக்கிடைக்காமல்
தவிப்பவனுக்குக்
கரன்சிகள் வெறும்
காகிதக்கட்டுகள்
தானே
Comments
Post a Comment