பொதிகை தொலைக்காட்சியில் 15.12.13 அன்று மதியம் 1.30 மணி அளவில் ''கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்''நிகழ்ச்சியில் சௌந்தர மகாதேவன் வழங்கிய கவிதைகள்



எலிகளானோம் நாம்

உன் உயிர் பிரியும் இறுதிநாளுக்கு
முந்தைய நாள் வரை நீ சகஜமாகத்தானிருந்தாய்
மரணத்தின் விடியல் என்றறியாமல் துயிலெழுந்து
பல் துலக்கிப் பலகாரம் உண்டு
பாளை பஸ்நிலையம் ஓடி
பேருந்து பிடித்துப் பதறிப் பணி செய்து
வண்ணாரப்பேட்டை பேராச்சி அம்மனைத் தரிசித்து
மகனைப் பற்றிக் கவலைப்பட்டு
மகளறியாமல் அவள் செல்பேசிய எண் பார்த்து
ஆயாசத்தோடு படுக்கப் போகும் வரை
நீ அறியாத உன் மரணம்
உன் காலுக்குக்கீழே தான் பரவிக்கொண்டிருந்தது




வாளியிலிருந்து சிந்திய தண்ணீர்
தரையில் பரவுவதைப் போல்
அடுக்களை இருட்டிலிருக்கும்
பூனையைக் கவனிக்காமல்
அதன் எதிரில் உலவும் எலிகளானோம் நாம் .



லாடம்

நடக்கச் செருப்பு மாட்டக்
கால்களை நகர்த்தினேன்

கால்களுக்குக் கீழ் திப்பல் திப்பலாய் குருதித்திட்டு!
நிழலாடுகிறது மனதின் மர்மப்பகுதியில் ரணம்.

சமாதானபுரத்துப் போக்குவரத்துப் பணிமனைமுன்
காளையின் கால்களைச் சுருக்கிடுகின்றன
அவனது கறுப்புக் கரங்கள்
இன்னபிற கரங்கள் அதைச் சாய்க்க.

பக்கவாட்டில் கால்களைக்குவித்துச்
சாய்ந்து கிடக்கிறது அக்கம்பீரக்காளை!

தோல்பையைத் துழாவி அக்கரம்
லாடத்தையும் கூரிய ஆணிகளையும்
எடுக்கிறது
கால் குளம்பில் வைத்துச் சுத்தியால்
அடிக்கிறது
எஞ்சிய இடங்களைக் கூருளி
செதுக்கித் தள்ளுகிறது.

வாடிவாசலில் சீறிப்பாய்ந்த அந்தச்சீவனை
அதற்குமேல் பார்க்கச் சகிக்கவில்லை.

என் பாதத்திற்குக் கீழும் லாடங்கள்
ஆணிகள்அடிகள்
செருப் பணியத் தோன்றவில்லை
வெற்றுக் காலோடு நடந்தேன்
வலித்தது
ஒவ்வோர் அடியும்.
..................................................................................................................................................................
எனக்கான பாடல்
உன் உதட்டிலிருக்கிறது.
எனக்கான அன்பு
இன்னும் உன்னால்

தரப்படாமலிருக்கிறது.
எனக்கான உன்கவிதை
இன்னும் உன்னால்
எழுதப்படாமலிருக்கிறது.
அன்பை ஆயுதமாக மாற்றத்
தெரியாமல் எனக்கான
வாழ்வையே நான்-இன்னும்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
........................................................................................................................................................................
பறவை
 உறவை
 வர... வை.
உன்னுள்
பறக்கும்
உன் மனமும்
அத் தினமும்
........................................................................................................
கரும்பாறைகளால் கட்டியவனையும்
எள்ளிநகையாடியபடி
இடுக்குகளில் வழியே
கசிகிறது அணைகளைக் கடக்கும்
சுதந்திரம்தேடும் சுந்தரத்துளிகள்.
.............................................................................
 
எழுதாத பேனாக்களையும்
எடுத்தெடுத்து வைத்திருப்பார் 
அப்பா
தொலைபேசி எண் குறிக்கவோ
அவசரமாக ஏதோ எழுதவோ
எடுத்து எழுதினால்
மையற்று  
எழுத்தின் தடம்
மட்டும் தெரியும் .
ஆனாலும் அவற்றைத் தூரப் போட 
அப்பாவுக்கு மனசுவராது
சில நேரங்களில் தேய்ந்துபோன
குட்டைப் பென்சிலைக் கூட
அவர் மாட்டி எழுதிப் பார்த்திருக்கிறேன் .
அது சரி
அடுக்கடுக்கடுக்காய்
 ஆயிரம் பேனாக்களை
வைத்திருக்கும்
பேனாக் கடைக்காரன்
என்ன எழுதுவான் தன் கடைப் பெயரைத் தவிர
வெட்டப்பட்ட மரமிருந்த இடம்
வெறுச் சென்றெருந்தது .
கலவரத்திற்குப் பிந்தைய
கடைத் தெருவாய்

............................................................................................
பசலிப் பழங்களை நசுக்கி
நகச் சாயம் இட்டதில்லை
பஞ்சு மிட்டாய் தின்று
கண்ணாடியில்
நா நீட்டிப் பார்த்ததில்லை
சோப்பு நீர் கொண்டுக்
குமிழிகள் விட்டதில்லை
காகிதம் கிழித்துக்
கப்பல் ஒன்றும் விட்டதில்லை
வாடகை சைக்கிள் ஓட்டி
கை விட்டுப் பறந்ததில்லை
பட்டம் விட்டதில்லை
படம் போட்டுப் பழக்கமில்லை
பம்பரம் பார்த்ததில்லை
கோலிக்கா சேர்த்ததில்லை
ஒன்றும் அறியாமல்
கம்பிக்குள் வாழ்கிறேன்
அரை மணி நேரத்தில்
அறுபடப் போகும்
பிராய்லர் கோழியாய்
..............................................................................................
ருத்ர மூர்த்தி

ரவுத்திரம் கண்களில் கொப்பளிக்க
அவனும் அவளும் கலந்த
சங்க தேகத்தோடு
அம்பலத்திலாடுகிறான் சிவன்

அவனது உடுக்கை ஒலியில்


அண்டங்கள் பொடிபடுகின்றன
அவனது பாத பங்கயங்களில்
பந்தாடப்படுகின்றன நவகோள்களும்

அவனருகில் ஒலிக்கும் பிரணவப்பேரொலி
செவிப்பறைகளில் ரீங்காரமிடுகிறது
பஞ்ச சபைகளும் பதறுகின்றன அவனது
ஆட்டமும் ஓட்டமும் தாங்காமல்

இனித்தமுடைய அவன் பொற்பாதங்களில்
உருண்டது ருத்ர பூமி அங்குமிங்கும்
        அப்பொது
குழந்தை அழுகுரல் அவனை
நிலைகுலைய வைத்தது
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
திகைத்தான் ஒரு வினாடி

அப்போதே ஈசன் -  தாய்ப்பாச
நேசனாய் தனத்தோடு மாறினான்
சக்தியும் உள்ளாளே சரிபாதியாய்

இன்னொரு சம்பந்தன்
இருக்கலாமல்லவா என்றாள்
அகிலாண்ட நாயகி.
............................................................................................................



Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்