நன்றி :வடக்குவாசல் மாத இதழ் மவுனயுத்தம்
மின்சாரமற்றுப் போன
காலைப் பொழுதுகளில்
அழைப்பு மணிகள் அமைதி காக்க
மரக்கதவுகள் அப்பணி செய்யும்.
சன்னலோர தாமிரபரணி
ரசிப்புகள் கூட
நடத்துநரின் சீட்டு நச்சரிப்பில்
கடந்து சாகும்.
பாட்டியின் அரை நூற்றாண்டு
உடல் தளத்தில்
டேபிள் டாப்புகள் ஓடித் தொலைக்கும்.
தாய்ப்பாலுக்கு அழும்
சம்பந்தக் குழந்தைகளுக்குச்
செரிலாக்குகள் செய்து தரப்படும்
சுப்புக் கோனார் ஐயாவின்
நுரைத்துப் பொங்கும்
செம்புப் பால்களை
தூக்கி எறியப்படும்
பால் பாக்கெட்டுகள்
பதிலீடு செய்யும்.
நர்சரிக் குழந்தைகளின்
பாடத்திட்டத்தில்
முதியோர் இல்லங்களின்
முகவரிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
என்ன செய்ய
மண்டையோட்டை உடைத்தாலும்
மறுபேச்சு பேசாதிருத்தலைத் தவிர...
சவுந்தர மகாதேவன்
Comments
Post a Comment