திருநங்கைகளும் திரும்பிப்பார்த்துச் சிரிப்பவர்களும்


திருநங்கைகளும் திரும்பிப்பார்த்துச் சிரிப்பவர்களும்
 
நெல்லை விரைவுத்தொடர் வண்டி
வாஞ்சி மணியாச்சியைக்
கடந்ததும் வந்துவிடுகிறார்கள்
அந்தத் திருநங்கையர்கள்…

வளையலைக் குலுக்கி
முகத்திற்கு நேரே
கைதட்டிக் காசு கேட்கிறார்கள்…

சன்னலுக்கு வெளியே
தலைநீட்டும் குழந்தைகளைப்
பாசத்தோடு வருடிக்கொடுத்து
முள் கிழித்து விடும் தலையை
உள்ளே இழு என்கிறார்கள்.

தொடர் வண்டியின் சிறு அறைகளை
அவர்கள் கடந்துசெல்லும் போதெல்லாம்
பாலின வேறுபாடின்றி வண்டி முழுக்க ரகசியமாய்
கிண்டலும் நக்கலும்.

நையாண்டிச் சொற்கள் அவர்களின்
காதில் விழாமலா இருக்கப்போகிறது?
கேட்காதவர்களைப் போல்
நகர்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

தலையை உள்ளிழுத்த
அந்த விரல் சூப்பும் குழந்தை மட்டும்
அவர்களின் கிண்டல் சிரிப்பின்

அர்த்தம் புரியாமல் திகைக்கிறது.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்