முன்பதிவு செய்தால் மட்டுமே
வீடு கட்டும் செங்கலில்
தொடங்கி சிறு வீடு கட்டும்
பொங்கல் பயணச்சீட்டு
வரை யாவுமே
முன்பதிவு
செய்தால் மட்டுமே
முன்னரே கிடைக்கிறது.
கருத்தரித்த நாளிலிருந்து
காத்துக் கிடந்தால்தான்
- குழந்தை
உருத்தரித்த பின்னாவது
ஆங்கிலப்
பள்ளியில் இடம் கிடைக்கிறது.
அறுத்து குழந்தையை
எடுக்கும் நாள்முதல்,
மின்மாயானத்தில் எரிப்பது
வரை
முன்பதிவற்று உடனே
ஏதும் சாத்தியமில்லை.
உறவறியா நண்பனின்
கணநேர உதவியும்
ஜனித்தவுடன்
தாயின் தனங்களில் சுரக்கும்
தீம்பாலும்
நதியின் தண்மையும்,
இளந்தளிரின் மென்மையும்தான்
முன்பதிவற்று
இன்று உடனே கிடைக்கிறது
கவனம்!
அதையும் முன்பதிவுக்குட்படுத்த
ஏதேனும்
ஓர் இணையத்தளம் வந்தாலும்
வரலாம்
Comments
Post a Comment