நிலத்தாலாட்டு
குட்டி நிலாவை முதன்
முதலாய்
பள்ளத்தில் பார்த்தது
புதுப்பட்டிக்
காமாட்சிப் பாட்டி
வீட்டுக் கேணியில்தான்
கோடை விடுமுறைக்கு
எப்போது சென்றாலும்
படிகளில் ஏறிக் கேணிக்குள்
முகம் பார்த்தபின்தான்
சாப்பாடு கீப்பாடு
எல்லாமே!
ஊரணிக் கருகே இருந்ததால்
வற்றிப் போக வாய்ப்பற்று
ஊறியது
தங்கை தவறவிட்ட வாளியிலிருந்து
எல்லாவற்றையும் எடுத்துத்
தரும்
பாதாளக் கரண்டியை
அதிசயத்தோடு
முதலில் கண்டதும் அங்கேதான்
ஐந்து வயதில் கேணிக்குள்
விழுந்த அம்மாவை
இடுப்புக் கயிறுகட்டி
உள்ளிறங்கித்
தூக்கிவந்த மருதையாத்தாத்தா
முதல்
எத்தனையோ மனிதர்களின்
வரலாறுகளை ஊற்றுக்குள்
ஒழித்துவைத்திருந்தது
அக்கேணி
கட்டியவனின் குத்துச்
சொல் தாளாமல்
அதே கேணிக்குள் செத்து
மிதந்த
ஆனந்தி அக்காவின் சடலத்தைப்
பார்த்தபின்
கேணிக் குளியலும்,
நிலா ரசித்தலும்
நின்று போனது.
ஆனாலும் கவலைகள் ஏதுமற்று
நிலவுக்கு நிலத்தாலாட்டு
நடத்திக் கொண்டிருக்கிறதுஅக் கேணி.
கவலை வலை...
மாம்பழங்களுக்குள்ளும்
மகிழ்ச்சியாக
வண்டாட முடிகிறது கருநிறப்
பூச்சிகளால்
பாறைகளுக்குள்ளும்
பத்திரமாக
உயிர் வாழ முடிகிறது
தேரைகளால்
கொங்குதேர் வாழ்க்கை
நடத்தும்
அஞ்சிறைத் தும்பிகள்
பூக்களுக்குள்ளும்
துயில்கொள்ள முடிகிறது
அட்டைப் பெட்டிகளுக்குள்ளும்
குட்டிகளைக் காக்க
முடிகிறது பூனைகளால்
மின்சாரவடங்களிலும்
கவலையற்றுக் கால்பதிக்க
முடிகிறது பறவைகளால்
கண்டங்களைக் கடந்து
விரிவானில் விரைந்து
வரமுடிகிறது
அலகுநீள்
ஆஸ்திரேலியக் கொக்குகளால்
யாவற்றையும் இழந்து
கவலைகளை முகத்தில்
ஒட்டியபடி
அபலைகளாய் அலைய
மட்டுமே நம்மால் முடிகிறது
சொந்த ஊரை
விட்டுச் சோறு கூடக்கிடைக்காமல்
தவிப்பவனுக்குக்
கரன்சிகள் வெறும்
காகிதக்கட்டுகள்
தானே
மண் காக்க வந்த மகா பாரதியே!
எட்டயபுரத்து எரிமலைப்
பாட்டே!
இயங்கிய இதயங்களின்
கவிதைத் துடிப்பே!
தூங்கிக் கிடந்த எம்மினத்தைத்
தாங்கிக் கிடந்த அடிமைத்தனத்தைக்
கவிதை
டாங்கி கொண்டு நீ சுட்டாய்
“மகாபாரதி“ என இறவாப்புகழ்
பெற்றாய்.
பெண்ணியம் பேசிய தமிழ்ப்
பெம்மானே –
தமிழ்
பண்ணிய உயர் புண்ணியம்
நீதானே!
தண்ணிய தமிழை நீ தரணியில்
உயர்த்தினாய்
திண்ணிய நெஞ்சத்தோடு
நீ பாரதத்தைத் திருத்தினாய்
மதிதா... மதிதா என்று
பராசக்தியிடம் பாதம் பணிந்தவனே!
'விதிவா... விதிவா' என உன்னை
விரைந்து அழைத்த போதும் காலனை உன் காலருகே
இட்டு
மிதித்தவனப்பா நீ!
உன் கவிதைக்கண் சிவந்ததால்
இந்த அடிமைமண் சினந்தது
யாப்புக்குள் அடங்கிய
வெண்பா
உன்னால் எழுச்சிமிக்க
பெண்பாவானது.
நீ இந்திய இருட்டு
தீர
சுதந்திர வெளிச்சம்
தந்த
கவிதைச் சூரியன்
அந்நியரின் திறவாக்
கதவுகளை உடைத்தது
உன் இறவாத் தமிழாயிற்றே!
உதயம் தந்த உன்னதச்
சூரியன் என்றாலும்
அஸ்தமனங்கள் உனக்கு
என்றுமில்லை
Comments
Post a Comment