இரங்கலும் இரங்கல் நிமித்தமும்…
காற்றின் காதுகளில்…
காற்றின்
காதுகளில்…
யாருக்குத்
தெரியும்?
இழுத்துக் கொண்டு
கிடக்கிறவரின்
இறுதி நினைவு
இன்னதென்று!
யாருக்குத்
தெரியும்?
பூர்வீக விட்டை
வறுமையை எதிர்கொள்ள
விற்றுவிட்டுப்
போகிறவனின்
இறுதிப்
பார்வையின் பொருள்
இப்படி…
யாருக்கும்
தெரியாச் சொற்கள்
உண்டு கோடானு கோடி
காற்றின் காதுகள்
மட்டுமே அறியும்
காலமானவனின்
கடைசி வார்த்தைகளை…
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்…
இரங்கலும் இரங்கல்
நிமித்தமும்…
கூவங்களைத்
தனதாக்கி
அழுதலை அலையாக்கிச்
செத்தமீன்களோடும்
புலவு
நாற்றமெடுத்த நெய்தல் பரப்போடும்
கரையிடம்
கண்ணீர்க் கடிதம் தர
முயல்கிறது
அலைகடல்
மதுபானப்புட்டிகளின்
மலைப்பில்
வெள்ளைக் கண்ணீர்த்தாரைகளைக்
கொட்டியபடி
குற்றால
அருவிகளும் அகத்தியர் அருவிகளும்
சாயப் பட்டறைகளின்
மாய நிறங்களைத்
தனதாக்கி
நாளொரு வர்ணமாகப்
பொழுதொரு நச்சாக
ஓடிக்கொண்டேயிருக்கின்றன
தமிழகத்து வண்ண நதிகள்.
அணுக்கதிர்
வீச்சுக்கு
ஆளாகி அழிகின்றன
உலக நாடுகள்.
இழந்த
நிமிடங்களின்
இறந்தகாலப்
புதல்வர்களாக
இரங்கல் கவிதை
இயற்றிக்
கொண்டிருப்பதைத் தவிர
இப்போது நம்மால்
என்ன செய்ய
முடியும்?
பயண மரணம்
பரபரப்பான சாலைகளில் தொடங்குகின்றன
நம் ஓட்டமிகு ஓயாத “காலைகள்“;
மின்சாரத் தொடர் வண்டித் தொங்கல்களில்
முடிகின்றன… நம் மயக்கந்தரு “மாலைகள்”.
பாற்கடலுமற்றுப் பஞ்சணையுமற்றுச்
சன்னல்களில் சாய்ந்தபடி
கணநேரச் சயனங்களுமுண்டு சில நாட்களில்
பூங்கா நகர்த் தூங்கா நிலையத்தில்
நடைபாதை சிமிண்ட் தளத்திற்குத்
தண்டவாளத்திலிருந்து தாவி ஏற
முயல்கிறது
நகரத்தின் விரைவறியா – அச்
சின்னஞ்சிறு அணில் குஞ்சு.
யாரும் எதிர்பாராக் கணத்தில்
அதைக் கொத்தித் தூக்கத் துடித்த
காகங்களைத் தண்டவாளத்திலிறங்கி
விரட்டி விடுகிறார் அக்கிராமத்து மனிதர்
வலப்புறமிருந்து விரைந்து வந்த
தொடர்வண்டி ஏறிச் சின்னாபின்னமாகிறது
அச்சின்ன அணில்.
பேயறைந்து அவர் நிற்க
காகிதக் குவளைகளோடும்
கோக் பாட்டில்களோடும்
வாக்மென் பாதசாரிகளுடனும்
வருத்தமற்றிருந்தது
எப்போதும் போல் இயல்பாயிருந்தது
அந்நிலையம்
பத்து நிமிடங்களுக்கு முன் தண்டவாளம்
கடந்தவன் ரத்தச்சகதியாக மாறியதையும்
அமைதியாகப்
பார்த்ததைப் போல...
தப்பாய் போன அப்பாப் பழமொழி
தப்பாய் போன அப்பாப் பழமொழி
குழந்தை பிறந்தவுடன்
அந்நாளின் காலண்டர்தாளைக் கிழித்து
நாற்பது பக்க நோட்டில் ஒட்டி
இன்னார் குழந்தை இந்த நாளில்
சுப ஜனனம் என்று மறக்காமல்
எழுதி ஆவணப்படுத்துவார் அப்பா.
கேஸ் சிலிண்டர் வந்தவுடன்
சோற்றுப் பருக்கையை நசுக்கிக்
காலண்டர் தாளால் காலப்பதிவு செய்வதும்
அவர்தான்.
கழிவு நீர்த் தொட்டியைச்
சுத்தம் செய்த நாளைக் கூடத்
தாரால் தகரக் கதவில் அவர்
எழுதியிருந்தார்.
வங்கி நாமினிக்காக
என் மனைவியின் பிறந்தநாளை
ஐ.ஓ.பி. மேலாளர் கேட்டார்;
அதையே நானும் அவளிடம்
தொலைபேசியில் கேட்டேன்
அதோடு கெட்டேன்.
அப்பாவுக்குப் பிள்ளை
தப்பாமல் பிறந்தானென்ற
பழமொழியும் இப்போது
தப்பாய் போனதெப்படி
Comments
Post a Comment