என் தெய்வம்
தெய்வம் தொழல்…
என் தெய்வம்
மண்ணாலும் மாடத்தாலும்
சுட்ட
சுண்ணாம்பாலுமானது.
என் தெய்வத்திற்கு
என்னைப் போல்
வானம் ஒன்றே
மேற்பரப்பு.
என் தெய்வம் நித்ய
பூஜை செய்யச் சொல்லாது;
என் தெய்வம்
நானருந்தும்
யாவற்றையும்
அருந்தும்.
எதையும் கூடாதெனப்
புறந்தள்ளாது;
என் தெய்வம்
கோவில் கட்டிக்
கும்பிஷேகம்
நடத்தச் சொல்லிப்
பிரசன்னத்தில்
பேசாது.
என் தெய்வத்தை
எவரும் தொடலாம்
எப்போதும் பூ
விடலாம்.
என் தெய்வம்
பாசாங்கற்றது
பட விளம்பரங்கள்,
இணைய முகவரிகள் அற்றது.
என் தெய்வம்
ஆளுயர
உண்டியல்கள், அறங்காவல்
குழுக்கள்,
நன்கொடைச் சீட்டுகளற்றது
என் தெய்வம்
மறந்த
நேர்ச்சைகளுக்காக
மரண அடி
கொடுக்காது
மொத்தத்தில்
என் தெய்வம்
என் இயல்பானது
என் சாயலுடையது
என் குணம், என்
நிறம்,
என் மணம், என் மண்
மணமுடையது.
உள்ளம்
பெருங்கோயில்
உள்ளிருப்பது என்
தெய்வம்.
எனவே உற்சவங்கள்
தேவையில்லை
உள் நினைத்தல்
ஒன்றே போதும்.
Comments
Post a Comment