ஒளியிலே தெரிவது....
தலைவாசலுக்கு வலப்புறமுள்ள
மாடக்குழிகளில் விளக்கேற்றிப்
பல யுகங்களாயிற்று.
எண்ணெய்ப் பிசுக்கைச்
சுரண்டியெடுத்து
ஓட்டை வாளி அடைத்ததும்
அப்படியே!
கார்த்திகை வந்தால்
கிளியாஞ்சட்டிகள் ஒளித்துகள்
உமிழும்
சுவர் விளக்குகள் வந்த
பின்
திரியுமில்லை தீபமில்லை
தெருவில்
ஒளியுமில்லை
டீசல் மின்தயாரிப்பு
எந்திரங்கள் வந்தபின்
தெய்வத்தின் முன் தீவட்டி
தூக்கிய மனிதர்கள்
தெருவுக்குப் போய்
விட்டார்கள்
சப்பரத் தண்டாயத்தில்
எண்ணெய் வாளியுமில்லை
சாமி சென்ற சுவடு காட்டிடத்
துளிகளேதும் சாலையில்
இல்லை.
இப்போது
இருளின் “கறு கறுப்பில்“
மின்சாரமற்ற
நடுத்தர மக்களின் தெருக்கள்
அங்கே ஒளியிலே தெரிவது
வெளிநாட்டுக்கு வேலைக்குப்
போனவனின்
வீடு மட்டுந்தான்
இன்வெர்டர்கள்
இருக்கும்போது
இருளைப் பற்றி
என்ன கவலை?
வெளிச்சம் கூட
வேண்டியவர்களுக்கு
மட்டுமே கிடைக்கிறது
Comments
Post a Comment